ஆக. 18ம் தேதி கலைஞர் நினைவு நாணய வெளியீடு.. இபிஎஸ், ரஜினி, கமல், அண்ணாமலைக்கு அழைப்பு!

Meenakshi
Aug 12, 2024,06:40 PM IST

சென்னை: ரூ.100  கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா  வெகுச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கில்  ஆகஸ்ட் 18ம் தேதி மாலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு திட்டமிட்டு, இது தொடர்பாக கோரிக்கை வைத்தது. அதற்கு  மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. அதன்படி தற்போது 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்படவுள்ளது.




கலைஞர் நினைவு நாணயத்தின் ஒரு புறம் சிரித்த முகத்துடன் " முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924- 2024"  என ஆங்கிலத்திலும் இந்தியிலும் அச்சிடப்பட்டுள்ளது.ம றுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா என ஆங்கிலத்திலும், பாரத் என இந்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  நாணயத்தை கலைஞர் நூற்றாண்டு விழாவில்  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்  வெளியிடுகிறார். 


இந்த நாணயம் கலைஞரின் 100வது பிறந்த நாளான கடந்த ஜூன் 3ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. நாணயம் வெளியிடுவதற்கான நடைமுறைகள் நிறைவடையாத காரணத்தினால், குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியவில்லை. இந்நிலையில் தற்போது நாணயத்திற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து நினைவு நாணயத்திற்கான அனுமதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டார்.


சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.