பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பேச்சு.. கண்ணியம் தவறிய செயல். எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

Su.tha Arivalagan
Apr 23, 2024,03:25 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடந்த பாஜக கூட்டத்தில் இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியது கண்ணியம் தவறிய செயல். நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.


ராஜஸ்தானில் நடந்த  பாஜக கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்கள் குறித்துக் கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இதைக் கண்டித்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் டெல்லியில் புகார் தரப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடுமையாக கண்டித்து அறிக்கை விடுத்திருந்தார்.


இந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:




பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி  அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் நாட்டின் உயர் ஆட்சி பதவியில் உள்ள பாரத பிரதமர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்து வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்தது அல்ல.


இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சி தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தில் மாண்புமிகு உயர் பதவியில் இருப்பவர்களும் இது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும் மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.


அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அதன் உணர்வுகளை தூண்டுவதாகும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இது போன்ற மத துவேச கருத்துகள் யார் பேசினாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும் நாட்டை நலனுக்கு இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.