அதிமுக ஒன்றிணைந்தால் அனைவருக்கும் வாழ்வு... இல்லையேல் தாழ்வு... முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
தேனி: கட்சி இணைய நான் எவ்வளவோ விட்டுக்கொடுத்துள்ளேன். அதிமுக ஒன்றிணைந்தால் நான் உட்பட அனைவரும் அனைவருக்கும் வாழ்வு. இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு தான் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது:
ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு உரிமை கோர முடியாது. அதிமுக விதிமுறைகளின் படி தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். பொதுச் செயலாளரை தேர்வு செய்ய 18 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்ற வகையில் விதியை மாற்றி விட்டனர். ராமநாதபுரத்தில் தன்னை தோற்கடிக்க ஆறு பன்னீர் செல்வங்களை இறக்கினார்கள்.
2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக நான், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினோம். அமித்ஷா ஒன்றாக இருக்குமாறு எவ்வளவோ சொன்னார். ஆனால் எதற்கும் எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை. அதன் விளைவு தான் இன்றைக்கு அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது. 2021ம் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு தான்.
அதிமுக 6 இடங்களில் டெபாசிட் இழந்தது. கட்சி ஒன்றிணைத்தால் தான் ஜெயிக்க முடியும் என நான், சசிகலா உள்ளிட்டோர் கூறினோம். சசிகலா, டிடிவி தினகரனிடம் இது குறித்து பேசியுள்ளேன். கட்சி ஒன்றிணைய எடப்பாடி பழனிச்சாமி ஒத்துவரவில்லை. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உருவாக்கப்படும் என்றார்கள். அதற்கும் ஒப்புக்கொண்டேன்.
அதிமுக ஒன்றிணைய எந்த நிபந்தனையும் நான் விதிக்க மாட்டேன். கட்சி இணைய எவ்வளவோ நான் விட்டுக் கொடுத்துள்ளேன். அதிமுக ஒன்றிணைந்தால் நான் உட்பட அனைவருக்கும் வாழ்வு. இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு. இரட்டை இலையை முடக்கும் நிலையை உருவாக்கியவர்கள் அவர்கள் தான் என்று பேசியுள்ளார்.