முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8ம் ஆண்டு நினைவு நாள்.. தமிழ்நாடு முழுவதும் அதிமுக வினர் மரியாதை!

Meenakshi
Dec 05, 2024,12:36 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். அவரது 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருப்பு உடை அணிந்து வந்து, மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர். இதனையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயிலின் உட்புறத்தில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு,  தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்த்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை,

இந்த இயக்கத்தை, பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்காண பாதையில் தொடர்ந்து பயணிக்க உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் இதயதெய்வம் புரட்சித்தலைவி  அம்மா அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம். தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய "அமைதி, வளம், வளர்ச்சி" பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி! என்று பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்