தம்பி பார்த்து பேசுப்பா.. அதிமுக ஒரு மாதிரி.. அண்ணாமலையை விளாசிய எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Apr 13, 2024,04:43 PM IST

சேலம்:  2024 இல் அதிமுகவை ஒழிப்போம் என்று கூறுகிறார் அண்ணாமலை. தம்பி இது தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. உன் பாட்டனையே பார்த்த கட்சி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.


சேலத்தில் நடந்த அதிமுக பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தும் எச்சரித்தும் பேசினார். அவரது பேச்சிலிருந்து:


அதிமுகவை அழிப்போம் என்று எத்தனை பேர் கொக்கரித்து இருக்கிறார்கள் தெரியுமா. ஆணவத் திமிரில் பேசாதப்பா. எம்ஜிஆர் இதை உருவாக்கியது ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக.




அதிமுக ஆட்சி நடந்ததால்தான் தமிழகம் வளர்ச்சி பெற்றது. தமிழ்நாடு வளர்ச்சி பெறுவதற்காக தொடரப்பட்ட கட்சி தான் அதிமுக. எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா இந்த இயக்கத்தை கட்டி காத்தார். நல்லாட்சி புரிந்தார். 30 வருடம் தமிழகத்தை ஆட்சி புரிந்த கட்சி அதிமுக. எங்களை அழிக்க பார்க்கிறியா.


1998இல் ஊர் ஊராக போய் உங்களது தாமரை சின்னத்தை அடையாளம் காட்டி வளர்த்தவர் அம்மாதான். அவர் சொன்னதால்தான் இந்த சின்னமே மக்களுக்கு தெரிய வந்தது. அதுக்கு முன்னாடி வரைக்கும் தாமரை சின்னம்னா  மக்களுக்கு தெரியாது. 


நீங்க எல்லாம் அப்பாயின்மென்ட் ஆன தலைவர்கள். டெல்லி தலைமை நினைச்சா உங்களை நியமிப்பாங்க இல்லாட்டி நீக்குவாங்க. நாங்க அப்படி கிடையாது  உழைச்சு அடிமட்டத்திலிருந்து தலைவர் பதவிக்கு வந்தோம். நான் யூனியன் தலைவர், தொகுதி பிரதிநிதி, எம்எல்ஏ, அமைச்சர் என்று ஒவ்வொரு நிலையாக உயர்ந்துதான் முதல்வரானேன். ஆனா நீங்க அப்படி கிடையாது, நியமனம். டெல்லி நினைச்சா உங்களை எப்ப வேணாலும் மாத்தலாம். அதனால கவனமா பேசுங்க.  அதிமுக ஒரு மாதிரியான கட்சி.


ஒரு கவுன்சிலர் ஆக முடியல, எம்எல்ஏ ஆக முடியல, நீ வந்து எங்களை ஒழிக்க போறியா . பதவி வரும்போது பணிவு வரவேண்டும் அப்படின்னு எம்ஜிஆர் படத்துல ஒரு பாட்டு வரும். அதனால பதவி வரும்போதும் அதிகாரம் வரும்போதும் பணிவோடு இருக்கணும். இல்லாட்டி அது நிலைக்காது. மரியாதை கொடுத்து அதை திரும்ப பெற வேண்டும். ஆனால் அது உங்க கிட்ட இல்ல என்று காட்டமாக கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.