பாலியல் தொல்லை வழக்கு: திண்டுக்கல் பாஜக முன்னாள் செயலாளர் கைது

Meenakshi
Apr 11, 2024,03:03 PM IST
திண்டுக்கல்: பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த திண்டுக்கல் மேற்கு  மாவட்ட பாஜக செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில், காலை உணவு திட்ட சமையலராக பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல அரசு பள்ளியில் உணவு சமைப்பதற்காக வந்து கொண்டிருந்த போது, பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் தனது வண்டியில் ஏறுமாறு கூறியிருக்கிறார். சமையல் பொருட்களை கணக்கு பார்க்க வேண்டும் என்று  அழைத்து சென்றார். அப்போது தனியாக இருந்த அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  பெண் சமையலர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.



மேலும், அப்பெண் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் மகுடீஸ்வரன் மீது, 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய பார்வையாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கிறேன் என்று  கட்சி மாவட்ட தலைவர் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.