அண்ணாமலை அரசியல்வாதி அல்ல... அரசியல் வியாதி.. மீண்டும் சாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Meenakshi
May 29, 2024,05:55 PM IST

சென்னை:   இம்மெச்சூர் தலைவர் என்று சொல்ல முடியாத, இம்மெச்சூர் அரசியல் வீரர், அரசியல் வியாதி, அரசியல் வியாபாரி அண்ணாமலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக கூறியுள்ளார்.


அதிமுக -பாஜக இடையே கூட்டணி பிரிவுக்கு முக்கிய காரணமாக இருந்ததே, அதிமுகவின் முன்னாள் தலைவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துப் பேசியதே ஆகும். இதனால் அதிருப்தி அடைந்த தொண்டர்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று அதிமுக வின் கட்சி தலைமையை வலியுறுத்தியதன் காரணமே கூட்டணி முறிவுக்கு ஒரு காரணமாக கூறப்பட்டது.




இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா குறித்து மீண்டும் பேசியது, அதிமுகவினரை மீண்டும் கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது. மிகப் பெரிய இந்துத்துவா தலைவர் ஜெயலலிதா என்று அண்ணாமலை கூறி வருகிறார். அண்ணாமலையின் பேச்சிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களுடைய கட்சித் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர்கள். ஜாதி, மொழி, மதம்,  இனம் தாண்டி பல திட்டங்களை தீட்டியவர்கள். ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதை தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தனது ஆட்சிக் காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் இணக்கத்துடன் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.


ஒரு குறுகிய கண்ணோட்டத்தோடு அம்மாவை ஒரு மதத்திற்குள் அடக்கியது ஒரு இழிவான செயல். இவர்கள் ஒரு மதவெறி பிடித்தவர்கள். அம்மா ஒரு தெய்வ பலம் மிக்கவர். தெய்வ பக்தி உடையவர். மத வெறி கிடையாது. ஆனால் பிஜேபி ஒரு கொள்கை லட்சியம் இல்லாமல் இந்த ஒரு வேலையை மட்டும் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றது. அதை பற்றி எல்லாம் பேசாமல், எங்களைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார். 


திமுகவின் பி டீமாக இருந்து கொண்டு செய்து வருகிறார். திட்டமிட்டு ஸ்டாலினும் அண்ணாமலையும் செய்கின்ற கூட்டுச் சதி இது. அந்த வகையில் தான் அண்ணாலையின் கருத்துக்கள் இன்று இருக்கின்றது. பாலை குடிக்கும் போது சூடாக குடித்து விட்டு நாக்கை சுட்டுக்கொண்டும், மோரைக் குடிக்கும் போது ஊதிஊதியும் குடிக்கிறார் அண்ணாமலை. எவ்வளவு திட்டினாலும் சூடு சுரணையில்லாமல் இருக்கிறார். 


அரசியலில் இம்மெச்சூரிட்டியாக இருக்கிறார் அண்ணாமலை. இம்மெச்சூர் தலைவர் என்று சொல்ல முடியாது. இம்மெச்சூர் அரசியல் வீரர். அரசியல் வியாதி, அரசியல் வியாபாரி அண்ணாமலை. இவர் ஒரு அரசியல்வாதி இல்லை.  இதோடு அவர் கருத்துக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.