ஜெயலலிதா அனைத்து மத மக்களுக்கும் பொதுவானவர்.. அண்ணாமலைக்கு.. அதிமுக கண்டனம்

Su.tha Arivalagan
May 25, 2024,04:33 PM IST

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சிறந்த இந்துத்துவா தலைவர் என்று கூறிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மறைந்த ஜெயலலிதா தொடர்பாக அண்ணாமலை முன்பு கூறி கருத்துக்களைத் தொடர்ந்துதான் பாஜகவை தனது கூட்டணியிலிருந்து உதறியது அதிமுக. இந்த நிலையில் இப்போது மீண்டும் ஜெயலலிதா தொடர்பாக அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


மறைந்த ஜெயலலிதா சிறந்த இந்துத்துவா தலைவர். அவரது இடத்தைத்தான் இப்போது பாஜக நிரப்பி வருகிறது என்று அண்ணாமலை கூறியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்துக்கு ஒரு சில அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது ஜெயக்குமார் அறிக்கை விட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:




மறைந்த ஜெயலலிதா அவர்கள் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மற்ற மதங்களுக்கு பொதுவாக திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் எந்தவித வன்முறைக்கு இடமளிக்காமல் தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக திகழச் செய்தவர் மாண்புமிகு ஜெயலலிதா.


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா மீது அவதூறு பரப்பு நோக்கில் ஒற்றை மதவாதத்தை சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியதுய எம்ஜிஆர் வழியில் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமல் இல்லாத நிலை வேண்டும் என்ற திராவிட கோட்பாட்டின் அடிப்படையில் பொற்கால ஆட்சி தந்தவர் மறைந்த ஜெயலலிதா. 


ஜெயலலிதா அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக திருக்கோவில்களில் அன்னதானத் திட்டத்தை துவங்கி வைத்தார். புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம் 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது. புதிதாக வக்பு நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு மூன்று கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. வகுப்பு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் ஜெயலலிதா அவர்களால் ஒரு கோடியாக உயர்த்தப்பட்டது.




ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் தான் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலம் சென்று வருவதற்கு அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். ஜெயலலிதா அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும் அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும் எவ்வித சமர சமரசத்திற்கும் இடமின்றி உறுதியாக இருந்திருக்கிறார். தமிழ்நாடு அரசியல் உள்ளவரை அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராக ஜெயலலிதா அவர்களின் நெடும் புகழ் அவ்வண்ணமே நிலைத்து நிற்கும்.


அண்ணாமலை தனது சொந்த அரசியல் லாபத்திற்காகவும் தமிழ்நாட்டில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் ஜெயலலிதாவை இந்து மதத்தைச் சார்ந்தவர் என்று அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.