பாஜக நிலைமை.. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. காரணம் யாரு?. ஆர்.பி. உதயக்குமார் தாக்கு

Su.tha Arivalagan
Jun 05, 2024,05:31 PM IST

மதுரை:   எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு சொல்வது போல, நேற்று வரை எப்படி இருந்த பாஜக இப்போது, சந்திரபாபு நாயுடு, நிதஷ் குமார் சொல்வதைத் தட்ட முடியாத நிலைக்குப் போய் விட்டது என்று கிண்டலடித்துள்ளார் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்.


அதிமுக - பாஜக கூட்டணி அமையாமல் போனதால்தான் பெரும் தோல்வியை இரு கட்சிகளும் சந்தித்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இந்தக் கூட்டணி முறிய அண்ணாமலைதான் முக்கியக் காரணம் என்றும் அதிமுகவினர் குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயக்குமார், சன் செய்திகள் டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:


அன்றே சொன்னோம் கேட்டீங்களா:




கூட்டணியாக சேர்ந்து பயணிப்பதற்கும், பிரிந்து பயணிப்பதற்கும் ஒரு காரணம் அல்ல பல காரணங்கள் உள்ளன. அதிமுகவைப் பொறுத்தவரை அன்றே தெளிவாக இருந்தோம். பிரதமராக மோடி, முதல்வராக எடப்பாடியார் என்று  நாங்கள் சொன்னோம். அமித் ஷா முன்னிலையிலேயே அந்த திட்டத்தை முன்வைத்தோம். அவர்களும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார்கள். தலைவர்கள் ஏற்றுக் கொண்டார். ஆனால் ஒரு தலைவர் மட்டுமே முரண்பாடு. அவர் யார் என்பதை நாடே அறியும்.


அவரது அனுபவக் குறைவு காரணமாக, எல்லாக் கட்சிகளுக்கும் இன்று பெரும் சேதாரம் ஏற்படுத்தியுள்ள சூழலைப் பார்க்கிறோம். பொறுமையாக கையாண்டிருந்தால், பொறுமையாக கடந்திருந்தால், தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைவரான அவர், அவருக்கு முந்தைய தலைவர்கள் எப்படி சூழல்களை கையாண்டார்களோ அப்படிக் கையாண்டிருந்தால், வாயடக்கத்துடன் இருந்திருந்தால், நாவடக்கத்துடன் இருந்திருந்தால்.. இன்று  2 பேரை கேட்காமல் எந்த முடிவையும் பாஜகவால் எடுக்க முடியாது.. யாரு.. சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார்.


அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த அண்ணாமலை:


நேற்று வரை எப்படி இருந்தீங்க.. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. அப்படிங்கிற மாதிரி ஆயிருச்சு. உங்களை மாதிரி அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த காரணத்தால்தான் இந்த நிலை. எதிரி யார் என்பதை இலக்காக நிர்ணிப்பதில் உங்களுக்கு குழப்பம். 


கேரளாவில் உள்ளே நுழைய முடியாத நிலை பாஜகவுக்கு.. இப்போது ஒரு நடிகர், சுரேஷ் கோபி ஜெயித்திருக்கிறார்.


தமிழ்நாட்டில் எல்லாமே ஸ்டார் வேட்பாளர்கள்தான்..  பொன்னார், தமிழிசை, அண்ணாமலை, எல் முருகன் இப்படி எல்லாருமே  போட்டியிட்டீங்க. அனைவரும் மண்ணைக் கவ்வும் சூழலை ஏன் ஏற்பட்டது. நாங்க வாக்கு வங்கியை உயர்த்தியிருக்கிறோம். நீங்களும் உயர்த்திருப்பதாக சொல்றீங்க.. ஆனால் வெற்றி இலக்கை தொட முடியவில்லை.


நாங்களே போராடும் நிலையில் இருந்தபோது கை தூக்கி விடாமல், எங்களை குழியில் தள்ளி விட்டால் எப்படி. இதுதான் முக்கிமயான சூழ்நிலை.  எல்லாம் சரியாக போயிருந்தால் 33 இடங்களில் நாம் ஜெயித்திருப்போம் என்று கூறியுள்ளார் ஆர்.பி. உதயக்குமார்.