வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. டிசம்பர் 1ம் தேதி புயலாக மாறும்.. செம மழை இருக்கு!

Su.tha Arivalagan
Nov 27, 2023,07:46 PM IST


- மஞ்சுளாதேவி


சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது  அது உருவாகி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. 


தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து, மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிற 29ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.  அதைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி இது புயலாக மாறும்.




மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 7 நாட்கள் அதாவது டிசம்பர் 2 தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்ப்பார்க்கலாம்.


அந்தமான் தீவுகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழையும் ,நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழையும் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.


இன்று மழை நிலவரம்:


கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில்  இன்று கன மழை பெய்யக்கூடும்.


சென்னையைப் பொறுத்தவரை ,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. மிதமான மழை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கூட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்படவில்லை. அதேசமயம், நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் புறநகர்களில் விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது.