பழிவாங்க நினைக்காதீங்க... மறந்து மன்னிச்சுட்டுப் போய்ட்டே இருங்க.. தோனி அட்வைஸ்
ராஞ்சி: யாரையும் பழிவாங்க நினைக்காதீங்க. எல்லாவற்றையும் மறந்து விட்டு, மன்னித்து விட்டு போய்ட்டே இருங்க என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய அணி கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமுமான மகேந்திர சிங் தோனி.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கூல் கேப்டன் என்று பெயரெடுத்தவர். எந்த சூழலையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்கிறவர். பலருக்கும் இவர் ரோல்மாடலாக உள்ளார். தனது ‘DHONI’ செயலி தொடக்க விழாவில், வாழ்க்கையில் மன அழுத்தம் தவிர்த்து எளிமையாக வாழ்வது எப்படி என்பதை பகிர்ந்துகொண்டார் தோனி.
தோனியின் பேச்சு இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொருத்தமானதுதான். தோனியின் பேச்சிலிருந்து..
நாம் அனைவரும் பழிவாங்கும் மனப்பான்மையை கொண்டுள்ளோம். அவன் என்னை இப்படி சொன்னான், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், மன்னிக்கவும், மகிழ்ச்சியாக வாழவும் பழகிக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது, சில விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் எல்லோருமே அழுத்தத்தை உணர்கிறோம். மற்றவர்களின் வாழ்க்கை நம் வாழ்க்கையைவிட சிறந்தது என்று எண்ணுவோம். ஆனால், அதை விட முக்கியமானது அந்த அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறோம் என்பதே. நான் சில விஷயங்களில் கவலைப்படாமல் இருப்பவன். எல்லா விஷயங்களுக்கும் முழு கவனம் செலுத்தினால், முக்கியமான விஷயங்களுக்கு போதுமான நேரம் தர முடியாது.
எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது, எதை கவனிக்க வேண்டும், எதை விட்டுவிட வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். நேர்மையாக இருங்கள், உங்கள் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு நன்றியுணர்வைக் காட்டுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள் – அல்லது மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள், ஆனால் பயத்தை விடுங்கள். அவசியமற்றதை விட்டுவிடுங்கள் – ஒவ்வொரு கருத்திலும் அதற்குள் ஆழமாக செல்ல வேண்டாம்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், எளிமையாக இருப்பது முக்கியம். எனது வாழ்க்கைப் பாடத்தில் நான் கற்றுக் கொண்டது என்று கூறியுள்ளார் தோனி.