ஹாஸ்டலில் தொழுகை நடத்திய.. வெளிநாட்டு மாணவர்களை சரமாரியாக தாக்கிய கும்பல்.. குஜராத்தில்!

Su.tha Arivalagan
Mar 17, 2024,06:15 PM IST

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகை நடத்திய ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீது ஒரு கும்பல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. இந்த திடீர் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.


பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக  விரிவான விசாரணை நடத்த குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உத்தரவிட்டுள்ளார். 


குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகள், ஆப்கானிஸ்தான், முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இங்கு படிக்கிறார்கள். இவர்களில் முஸ்லீம் மாணவர்களும் கணிசமாக உள்ளனர்.




இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளது.  இது ரமதான் மாதம் என்பதால் இரவில் செய்யும் தொழுகையை இந்த மாணவர்கள் விடுதிக்குள் செய்துள்ளனர். அங்கு தனியாக மசூதி இல்லை என்பதால் விடுதிக்குள்ளேயே தாங்கள் தொழுகை நடத்தியதாக மாணவர்கள் கூறியும் கத்தி, கட்டைகளால் தங்களை அந்தக் கும்பல் தாக்கியதாகவும், அறைகளை அடித்து நொறுக்கி பொருட்களை சூறையாடியதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.


இந்த தாக்குதலில் மாணவர்களின் லேப்டாப்புகள், பைக்குகள், மொபைல் போன்கள் என ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளன. குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் குஜராத் பாஜக அரசுக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இப்படி நடந்திருப்பதால் இதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொள்ளும் என்ற அச்சமும் பாஜகவுக்கு வந்துள்ளது.


இந்தத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான், இலங்கை, துர்க்மேனிஸ்தானைச் சேர்ந்த தலா ஒரு மாணவரும், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த  2 பேரும் காயமடைந்துள்ளனர். சம்பவத்தின்போது போலீஸார் உடனே வரவில்லை என்று புகார் எழுந்துள்ளது. கும்பல் நுழைந்து தாக்குதல் நடத்தி போன பிறகுதான் போலீஸார் வந்தனராம்.