தமிழகத்தை தொடர்ந்து.. தெலங்கானாவிலும்.. இன்று முதல் பெண்களுக்கு இலவச பஸ் பயண சலுகை!

Meenakshi
Dec 09, 2023,02:56 PM IST

ஹைதராபாத்: தமிழகத்தை போலவே தெலங்கானாவிலும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி முதன் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக  கடந்த நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடந்தது. டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது.  


2014ம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலமாக மாறியதில் இருந்து முதல்வராக இருந்த சந்திரசேகர ராவ் தோல்வி அடைந்தார்.  சந்திரசேகரராவின் 9 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தெலங்கானா முதல்வராக 56 வயதான ஏ.ரேவந்த் ரெட்டி கடந்த வியாழக்கிழமை பதவி ஏற்றார். அன்றே துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பட்டி விக்ரமார்க்க மல்லு  மற்றும் 12 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.




காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த நிலையில், தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற் கட்டமாக பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப்  பயணத் திட்டத்தை இன்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். 


தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2500 உதவித் தொகை,  ரூ. 500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர். கல்வி பயிலும் மாணவர்களுக்கு  ரூ.5 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.


இவற்றில் முதலில்  பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணம் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.