என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

Su.tha Arivalagan
Feb 26, 2025,05:26 PM IST

சென்னை: என்னை தவெக நிகழ்ச்சியில் பாட வேண்டும் என்று கூப்பிட்டதுமே வந்து விட்டேன். எனக்கு ஒரே ஆசைதான். விஜய் அவர்கள் என்னை ஆஸ்தான பாடகியாக மட்டும் அறிவிக்கட்டும். பிறகு பாருங்க, அத்தனை பேரையும் கூட்டிக் கொண்டு வந்து அவரிடம் சேர்த்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் நாட்டுப்புறக் கலை பாடகி கிடாக்குழி மாரியம்மாள்.


கிடாக்குழி மாரியம்மாளை தென் மாவட்டங்களில் தெரியாதவர்கள், குறிப்பாக மதுரை, சிவகங்கைப் பகுதிகளில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர்தான் கிடாக்குழி மாரியம்மாள். பிரபலமான நாட்டுப்புறப் பாடகி. இவரது குழு போகாத பட்டி தொட்டியே கிடையாது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் இந்தக் குழு பிரபலமானது கர்ணன் படத்தின் மூலம்தான்.


மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், சந்தோஷ் நாராணன் இசையில் உருவான இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதில் இடம் பெற்ற கண்டா வரச் சொல்லுங்க என்ற பாடலை கிடாக்குழி மாரியம்மாள்தான் பாடியிருப்பார். அந்தப் பாட்டு அவரை தமிழ்நாடு முழுக்கக் கொண்டு சென்றது.




இந்த நிலையில் இன்று சென்னையில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு சூப்பராக ஒரு பாட்டுப் பாடியிருந்தார். இந்த நிலையில் தவெகவில் சேரும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் கிடாக்குழி மாரியம்மாள்.


இதுகுறித்து தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், அவங்கதான் கூப்பிட்டாங்க. தலைவர் விஜய்க்குப் பாடணும்னு கேட்டாங்க. சிவராத்திரிக்காக புரோகிராம் இருந்தது. இருப்பினும் விஜய்யைப் பார்ப்பதற்காக இங்கு வந்து விட்டேன். விஜய்யை படத்துல பார்த்துள்ளேன்.  அவரோட 12 வயசு முதல் பார்த்திருக்கேன். நேரில் பார்த்தது இன்றுதான். 


கட்சியில் பணி கொடுத்தால்,  கட்சியின் ஆஸ்தான பாடகியாக என்னை வைக்க ஆசைப்டுகிறேன். நிறைய மக்களை சேர்ப்பேன். அத்தனை பேரையும் தலைவரிடம் சேர்ப்பேன். இது எனது ஆசை. அனேகமாக இது நடக்கும்னு நினைக்கிறேன் என்றார் கிடாக்குழி மாரியம்மாள்.