விநாயகர் சதுர்த்தி வந்தாச்சு.. ஜெட் வேகத்தில் பூக்களின் விலையும் உயர்ந்தாச்சு..அதிர்ச்சியில் மக்கள்!

Manjula Devi
Sep 06, 2024,03:24 PM IST

திருச்சி: விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. 


விநாயகர் சதுர்த்தி இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் நாளை அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி  நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 




குறிப்பாக வட மாநிலங்களில் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்படும். வினைகளை அகற்றும் விநாயகப் பெருமானை கும்பிட்டு எந்த ஒரு செயலையும் செய்தால், அந்த செயல் தடையின்றி  வெற்றியடையும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த நன்னாளில் மக்கள் களிமண்ணில் ஆன விநாயகர் சிலைகளை பூக்களால் அலங்கரித்து எருகம்பூ மாலை அணிவித்து  கொழுக்கட்டை, சுண்டல், பொறி, பழங்கள், போன்றவை படைத்து வழிபடுவது வழக்கம்.


இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் பூ பழங்களை அதிகம் வாங்கி  பயன்படுத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக விநாயகர் சதுர்த்தி மற்றும் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.


அதன்படி ஒரு கிலோ கனகாம்பரம் 2500க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மதுரை மல்லி மற்றும் முல்லை ஒரு கிலோ தலா 400 ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஒரு கிலோ ரூபாய் 120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக விநாயகருக்கு சாற்றப்படும் அருகம்புல் ஒரு கட்டு ரூபாய் 30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்