ஜேசிபி மூலம் பூக்களை கொட்டி தமிழிசையை .. மலருக்குள் மூழ்கடித்த .. பாஜகதொண்டர்கள்!

Manjula Devi
Apr 13, 2024,02:51 PM IST

சென்னை: தென் சென்னை பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பிரச்சாரம் செய்து வந்த போது, ஜேசிபியால் பூ மழை பொழிந்து வரவேற்றுள்ளனர்.


தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பாஜக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார். இதனால் இந்தப் பகுதிகளில் டப் காம்பெடிஷன் நடைபெறுகிறது. ஏனெனில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கனவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். இதற்காக தீவிர பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார். 




இந்த நிலையில் தென் சென்னை தொகுதியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிர போட்டி நடைபெற்று வருகிறது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா  எல்லோரும் அறிந்ததே. அந்த திருவிழாவில் மீனாட்சி அம்மனின் திரு வீதி உலா நேற்று முதல் தொடங்கப்பட்டது . அப்போது ஒவ்வொரு நாளும்  சொக்கரும் மீனாட்சியம்மனும் திருவீதி உலா வரும்போது மேல மாசி வீதி பகுதிகளில் வானத்து தூதர்கள் போல ஒரு பொம்மையை ஏற்பாடு செய்து, அம்மையும் அப்பனும் மீது பூக்களை கொட்டி மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு நடத்துவது வழக்கம்.




அதுபோல டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தீவிர பிரச்சாரம் செய்ய வாகன பேரணி மேற்கொள்ளும் போது ஜே சி பி யில் நிறைய மலர்களை நிரப்பி தமிழிசை சௌந்தர்ராஜன் தலை மீது பூமழை பொழிந்தது. அந்த நொடியில் தமிழிசை சௌந்தர்ராஜன் அருகில் ஜேசிபி வரவும் பதறிப் போனார். அது மட்டுமல்லாமல் பொக்லைன் மூலம் ராட்சத மாலையும் அணிவிக்கப்பட்டது. இதனை பாஜக தொண்டர்கள் அனைவரும் வரவேற்று மகிழ்ச்சியில் கைகளை தட்டினர். பின்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் மகிழ்ச்சியில் பூக்களை அள்ளி  தொண்டர்கள் மீது தூவி வாக்கு சேகரித்தார்.