சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் புகுந்த வெள்ளம்.. ரூ.500 கோடிக்கு மேல் சேதாரம்

Meenakshi
Dec 06, 2023,11:59 AM IST
ஆவடி: சென்னை அம்பத்தூர் தொழில் பேட்டையில் புகுந்த வெள்ள நீரால் ரூ.500 கோடிக்கு மேல் சேதாரம் ஆகியுள்ளது.

சென்னைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருந்த அடர்ந்த காற்றழுத்த பகுதி மிச்சாம் புயலாக மாறியது. மிச்சாங் புயலால், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கன மழை பெய்தது. இந்த பேய் மழையால் கடந்த 2 நாட்களாக சென்னை வாசிகள் தவித்து வந்தனர். குறிப்பாக, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயந்திரங்கள், மூலப்பொருள்கள், உற்பத்தி பொருள்கள் ஆகியவற்றில் தண்ணீர் புகுந்ததால் பலத்த சேதாரமாகிதாக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

மிச்சாங் புயலால் அம்பத்தூர் ஆவடி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடர்ந்து திங்கட்கிழமை வரை அதிக கன மழை பெய்தது. இந்த தொடர் மழையால்,  ஆவடி பகுதியில்  உள்ள  கவரபாளையம் ஏரி, விளிஞ்சியம்பாக்கம் ஏரி, அயப்பாக்கம்  ஏரி, பருத்திப்பட்டு ஏரி, அம்பத்தூர் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளும்  நிறைந்து உபரி நீர் வெளியேறியது. உபரி நீர்  அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் புகுந்தது.அம்பத்தூர் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. இதனால் அம்பத்தூர் சிட்கோ தொழில் பேட்டை, அம்பத்தூர் தொழில்பேட்டை ஆகிய பகுதியில் உள்ள  சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில்  தண்ணீர் புகுந்து 3 அடி உயரத்துக்கு மேல்  தண்ணீர் நின்றது.



இதனால்,  அங்குள்ள இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கின. இங்குள்ள இயந்திரம் ஒவ்வொன்றும் கோடி ரூபாய் ஆகும்.  இதனால் தொழில் பேட்டையில் பலத்தை சேதாரம் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் தங்கியுள்ள தொழிலாளர்கள் உணவு, குடிநீர், தங்கும் இடம்  இன்றி அவதிப்பட்டனர். தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள நிறுவனங்களில் சுமார் 500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிற்பேட்டை பாதிக்கப்பட்டதை தெரிவித்த உரிமையாளர் ஒருவர் பேசுகையில், இந்த சேதாரத்தை சரி செய்தால் தான் நாங்கள் தொழில் தொடங்க முடியும். அம்பத்தூர் தொழில் பேட்டையில் 5000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 1500 தொழிற்சாலைகள் உள்ளன. மொத்த தொழிற்சாலையும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த அவல நிலை உள்ளதால் தொழில் பேட்டையை பார்த்து  முதல்வர் அவர்கள் நிவாரணம் வழங்க வேண்டும். இங்குள்ள நீரை  வெளியேற்றி நிவாரணம் வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என அந்த நிறுவனம் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.