வடிந்தது வெள்ளம்.. Cleaning பணிகள் தீவிரம்.. 4 மாவட்டங்களில் திங்கள் முதல் பள்ளி, கல்லூரி திறப்பு

Meenakshi
Dec 09, 2023,04:54 PM IST
சென்னை: புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக தொடர் விடுமுறையில் இருந்த சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் வருகிற திங்கட் கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிச்சாங்  புயல் காரணமாக  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமை முதல் பள்ளி கல்லூரிகள் மூடிக் கிடக்கின்றன. புயல் வந்த நாள் முதல் இன்று வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நான்கு மாவட்டங்களில் நிலைமை இன்னும் சீராகாத காரணத்தினால் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

மழை நீர் தேங்கிக் கிடந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. சென்னை நகர் மட்டுமல்லாமல் புறநகர்களிலும் இதே நிலைதான். பல இடங்களில் குளங்கள், ஏரிப் பகுதிகளில் செத்துப் போன மீன்கள் கிடப்பதால் துர்நாற்றம் அதிகமாக உள்ளது. இதனால் தொற்று நோய் அபாயம் எற்பட உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், மிச்சாங் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளை திங்கள்கிழமை திறக்க ஏற்பாடு செய்ய்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நேற்று முதல் கல்வி நிறுவனங்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசு அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பிறப்பித்துள்ளது. 

பள்ளி வளாகங்கள் முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். உடைந்த பொருட்கள் மற்றும் கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டும். பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மின் இணைப்புகள் உள்ளிட்டவற்றை சரிசெய்ய வேண்டும் என்று 4 மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிகல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, சென்னை புறநகர்ப் பள்ளிகளில் வெள்ளப் பாதிப்பு மோசமாக இருப்பதால் அவற்றை திறப்பதில் சிக்கல்கள் இருப்பதாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் கவலை தெரிவித்துள்ளன.