Flashback 2023: சச்சினை முறியடித்த விராட் கோலி.. ஆப்கானிஸ்தானை பந்தாடிய ரோஹித் சர்மா!

Su.tha Arivalagan
Dec 25, 2023,05:44 PM IST

சென்னை: விளையாட்டு உலகுக்கு குறிப்பாக கிரிக்கெட் உலகத்திற்கு இந்த ஆண்டு மறக்க முடியாத வருடம். பல அற்புதமான தருணங்களை சந்தித்தது கிரிக்கெட். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடந்தது என்றால் மறுபக்கம் அருமையான பல கிரிக்கெட் சாதனைகளும் அரங்கேறி ரசிகர்களை டபுள் ட்ரீட் கொடுத்து சந்தோஷத்தில் மூழ்க வைத்தன.


இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில்தான் பல சாதனைகள் அரங்கேறின. உலகின் சக்தி வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்தத் தொடரில் பல சரித்திரங்களை மாற்றிப் போட்டனர்.. புதிய சரித்திரத்தை எழுதினர்.


பல சாதனைகள் சமன் செய்யப்பட்டன.. பல முறியடிக்கப்பட்டன.. சில புதிதாக எழுதப்பட்டன.  உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 26 சதங்கள் விளாசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மறக்க முடியாத டிராவிஸ் ஹெட்




உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியை இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாது. ஒரு போட்டியில் கூட தோற்காமல் கடைசி வரை வெற்றி நடை போட்டு வந்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் 1 லட்சம் ரசிகர்கள் துணை இருந்த நிலையிலும், பரிதாபமான தோல்வியைத் தழுவியதை எப்படி மறக்க முடியும்.


இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், இந்தியத் தரப்பு கொடுத்த அதீத நெருக்கடி, அழுத்தம் உள்ளிட்டவற்றைத் தாங்கிக் கொண்டு, அதை சமாளித்து அற்புதமான சதம் அடித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிக் கோப்பையையும் பெற்றுக் கொடுத்து அதிர வைத்தார். வெறும் 59 பந்துகளில் அவரது அபாரமான சதம் வந்து சேர்ந்தது. 


விராட் கோலியின் சரித்திர சாதனை




இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் 49 சத சாதனையை முறியடித்தார் விராட் கோலி.  இந்த ஆண்டு தனது 50வது ஒரு நாள் சதத்தை விளாசி சச்சின் டெண்டுல்கரை முந்தினார் கோலி. அதுவும் சச்சின் டெண்டுல்கர் முன்பாகவே இந்த சாதனையை நிகழ்த்தி அதை அவருக்கு சமர்ப்பித்தார் விராட் கோலி.


நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்த சாதனையைப் படைத்தார் விராட் கோலி. மேலும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் 765 ரன்களைக் குவித்து அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரராகவும் உருவெடுத்தார். 


கிளன் மேக்ஸ்வெல் இரட்டை சதம்




ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல் போட்ட இரட்டை சதம் யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் நின்ற இடத்திலிருந்தே ரன்களைக் குவித்து மிரள வைத்து விட்டார். இது மிகப் பெரிய மீம் மெட்டீரியலாகவும் மாறிப் போனது. ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விளாசித் தள்ளினார் மேக்ஸ்வெல்.


21 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 201 ரன்களை எடுத்து மிரட்டி விட்டார் மேக்ஸ்வெல்.  இந்த வெற்றிதான் ஆஸ்திரேலியாவை தோல்வி தந்த சோர்விலிருந்து மீட்டெடுக்க உதவியது. 


ரோஹித் சர்மா




இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அபாரமான சதம் போட்டார். அதுவும் 63 ரன்களில் இந்த சதம் வந்து சேர்ந்தது. உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் இந்திய வீரர் போட்ட அதி வேக சதம் என்ற பெருமையும் இந்த செஞ்சுரிக்குக் கிடைத்தது.


உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவின் அனைத்துப் போட்டிகளிலும் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடியிருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டவும், பெரிய வெற்றி பெறவும் ரோஹித்தின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது.


ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா விளாசிய சதமஆனது, ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரில் அவர் அடித்த 7வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஷ்ரேயாஸ் ஐயர்




இதே இந்தியா - நியூசிலாந்து போட்டியில் இன்னொரு அதிசயமும் நடந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி 105 ரன்களைக் குவித்தார்.  இதில் 8 சிக்ஸர்கள் அடக்கம்.. மொத்தம் 70 பந்துகளில் இந்த சதம் வந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 397 ரன்களைக் குவித்தது.. அபார வெற்றியையும் பெற்றது.


நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர்களைப் பந்தாடிய இந்தியா இரக்கமே இல்லாமல் வெளுத்தெடுத்ததால் நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் நொந்து போனார்கள்.