தமிழகத்தின் மோசமான முதலமைச்சர்களில் முதன்மையானவர் ஸ்டாலின்.. எடப்பாடி பழனிச்சாமி

Meenakshi
Jan 27, 2024,03:43 PM IST

சென்னை: தமிழகத்தின் மோசமான முதலமைச்சர்கள் பட்டியலில் முதன்மையான முதலமைச்சர் என முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:




திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து பெருகி வரும் போதை பழக்கம் குறித்து அறிக்கை வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாக தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை அரசின் காவல்துறை எந்தவித ஆக்கப் பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.


நாள்தோறும் செய்தித் தாள்களை தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து செய்திகளே அலங்கரித்த வண்ணம் உள்ளன. தினசரி நாளிதழ்களை படியுங்கள் என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் இந்த அரசின் பொம்மை முதலமைச்சர், தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தவிர்த்து எந்த நாளிதழையும் படித்ததாக தெரியவில்லை. படித்திருந்தால் தன் அலங்கோல ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சவக் குழியில் இருப்பதை நிச்சயம் உணர்ந்து இருப்பார்.


கடன் வாங்குவதில் நம்பர்1 முதலமைச்சர்

சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் நம்பர் 1 முதலமைச்சர்

தமிழகத்தின் மோசமான முதலமைச்சர்கள் பட்டியலில் முதன்மையான முதலமைச்சர்.


ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், "சட்டம்-ஒழுங்கு என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்... மறுபடியும் சொல்கிறேன்... யாராக இருந்தாலும்" என்று கேமராவுக்கு முன் சினிமா வசனம் பேசிய ஸ்டாலின் அவர்கள், ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் வேலை சட்டம்-ஒழுங்கை மார்ச்சுவரிக்கு அனுப்பியதுதான்.


ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையின் அலட்சியப் போக்கையும், தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையையும் ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தப்பித்துக்கொள்ள தனக்குத்தானே கண்டனம் வேறு தெரிவித்துக்கொள்கிறார். அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, "திரு. ஸ்டாலின் அவர்களே, அது கண்ணாடி!”


தமிழகத்தில் தொடர்கதையாகி வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.