Happy Diwali Folks: நல்லா ஞாபகம் வச்சுக்கங்க.. தீபாவளிக்கு.. 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்கனும்!

Meenakshi
Nov 11, 2023,05:53 PM IST
சென்னை: தீபாவளி அன்று காலையில் ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் மட்டும் தான் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது காவல்துறை.

தீபாவளி என்றால் முதலில் நினைவுக்கு வருவது வெடி தான். எவ்வளவு ஆபத்து வந்தாலும் மக்கள் வெடியில்லாத தீபாவளியை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட வெடியை வெடிக்க காவல் துறையும் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசுகள் வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது  காவல்துறை....



அதன்படி, பட்டாசுகளை காலை 7 முதல் 8 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும். 

இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் நிறுத்தியுள்ள இடங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் அமைந்துள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

பட்டாசு விற்கும் கடைகளுக்கு அருகே சென்று புகைப் பிடிக்கவோ பட்டாசு வெடிக்கவோ கூடாது, ஈரமான பட்டாசுகளை சமையலறையில் உலர்த்தக் கூடாது.

கால்நடைகளுக்கு அருகில் சென்று பட்டாசு வெடிப்பதால் அவை மிரண்டு ஓடி, நடந்து செல்பவர்கள் மீது முட்டி விபத்து ஏற்படும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும்.

கையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு, கொளுத்திப்போடுவது மிக மிக ஆபத்தான விஷயம். இம்மாதிரி பட்டாசு வெடிக்கையில்தான், உடலில் அதிகளவு பாதிப்பு ஏற்படும். அதனால் கையில் வைத்து பட்டாசு கொளுத்துவதை தவிருங்கள்.

விபத்து ஏற்பட்டால் காவல்துறை அவசர உதவி எண் 100, தீயணைப்பு உதவி எண் 101, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, தேசிய உதவி எண் 112 உள்ளிவற்றை அழைக்கலாம் என தெரிவித்துள்ளது.

ஐயா, சாமிகளா வெடியை பாத்து கவனமா வெடிங்க... ரோட்டுல, தெருவுல ஆளுக நடமாட்டம் இருந்தா வச்சு வேடிக்கை பார்க்காதீங்க.. நாய் மாடு போன்ற அப்பாவி விலங்குகளை பட்டாசு போட்டு துன்புறுத்தாதீங்க..  மத்தபடி தீபாவளியை சூப்பரா கொண்டாடுங்க. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!