Tamil Nadu Budget 2024-25: "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி".. நாளை சட்டசபையில் தாக்கல்!

Su.tha Arivalagan
Feb 18, 2024,07:57 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி பட்ஜெட்டுக்கான முத்திரைச் சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.


நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள்  நாளைய பட்ஜெட் உரையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கான புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதைத் தொடர்ந்து பிப்ரவரி 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்வார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில் பட்ஜெட்டுக்கான முத்திரைச் சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது:


"தடைகளைத் தாண்டி" 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கும் முத்திரைச் சின்னம் 


"என்னருந் தமிழ்நாட்டின் கண்

எல்லோரும் கல்வி கற்றுப்

பன்னருங் கலை ஞானத்தால்

பராக்கிரமத்தால் அன்பால்

உன்னத இமயமலை போல்

ஓங்கிடும் கீர்த்தி எய்தி

இன்புற்றார் என்று மற்றோர்

இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?


என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஏங்கிய காலம் நிறைவேறி; இன்று தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னணி மாநிலம்! மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம்! தொழில்துறையில் முன்னணி மாநிலம்! இந்தியப் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னணி மாநிலம்! வேளாண்மையில் முன்னணி மாநிலம்! விளையாட்டுத் துறையில், இளைஞர்தம் ஆற்றல் நிறைந்துள்ளதில் முன்னணி மாநிலம் – என எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு எத்திசையிலும் புகழ் பதித்துத் திகழ்கின்றது. ஏடும், நாடும் இதர மாநிலங்களும் இதற்குச் சான்று பதிக்கின்றன.


இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற மே 2021-ஆம் ஆண்டில் ஆட்டிப்படைத்த கொரோனாவை முறியடித்து, காலமல்லாக் காலத்தே புயலும், மழையும், வீசி கடும் சேதங்களை விளைவித்த நிலையிலும், மக்களின் துயர் நீக்கி, நமது மாநிலத்திற்கு இயல்பாக வரவேண்டிய நிதிகளும், உதவிகளும், ஒத்துழைப்பும் கிடைக்காமல் தடைகள் பல தொடர்கின்ற நிலையிலும், முறையான, சிதையாத, கட்டுப்பாடான நிர்வாக நடைமுறைகளால் தடைகளை எல்லாம் தகர்ந்தெறிந்து, தொடர்ந்து முன்னேற்றத் திசையினில் தமிழ்நாட்டினை செலுத்திடும் நோக்கில் இந்த திராவிட மாடல் அரசு “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற இலக்கினை எளிதில் எய்திடும் வண்ணம் இன்று நான்காம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.


தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.


“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.