Budget 2024: இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.. நிர்மலா சீதாராமன்!

Su.tha Arivalagan
Feb 01, 2024,11:15 AM IST

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்து பேசி வருகிறார்.


இது தேர்தல் ஆண்டு. தற்போதைய மத்திய அரசு தாக்கல் செய்யப் போகும் கடைசி பட்ஜெட் இது. அந்த வகையில் பல்வேறு சர்ப்ரைஸ்களும், சலுகைகளும், அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.


இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான வரி விதிப்பு உள்ளிட்டவை இடம் பெற வாய்ப்பில்லை. லோக்சபா தேர்தல் முடிந்து, புதிய அரசு பதவியேற்கும் காலம் வரை மட்டுமே இந்த பட்ஜெட்டானது செல்லும் என்பதால் அதற்கேற்ற வகையிலேயே பட்ஜெட் இருக்கும்.




மாதாந்திர ஊதியதாரர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டி வருகிறார். எனவே பெண்களுக்கான திட்டங்கள் குறித்த அறிவிப்பும் இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறக் கூடும் என்று தெரிகிறது.


3வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பாஜக அரசு பல்வேறு முஸ்தீபுகளுடன் செயல்பட்டு வருகிறது. எனவே அதை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஒரு பேச்சு உள்ளது.


நாடாளுமன்றம் தற்போது புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. அந்த புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள முதல் பட்ஜெட் இதுதான். புதிய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமனுக்குக் கிடைத்துள்ளது. முதல் பட்ஜெட்டை புதிய  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அரசு, கட்சி என்ற பெயர் பாஜகவுக்குக் கிடைக்கவுள்ளது.