சிக்கினார் ஜெயந்தி.. சென்னை புழல் சிறையிலிருந்து தப்பி.. பெங்களூரில் பிடிபட்டார்!

Meenakshi
Dec 16, 2023,04:27 PM IST

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து துணிகரமாக தப்பியோடி பரபரப்பை ஏற்படுத்திய ஜெயந்தி, தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் புழல் சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டார். 


ஆண்கள் சிறை வழியாக இவர் தப்பி போனது விசாரணையில் தெரிய வந்தது. பார்வையாளர் அறைப் பகுதி வழியாக இவர் வெளியேறியது தெரிய வந்து சிறை நிர்வாகம் அதிரச்சி அடைந்தது. புழல் சிறையிலிருந்து ஒரு கைதி தப்புவது கடந்த 17 வருடங்களில் இதுதான் முதல் முறை என்பதால் சிறைத்துறைக்குப் பெரிய சங்கடமாகி விட்டது.




இதையடுத்து பெண் கைதி ஜெயந்தியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் தற்போது ஜெயந்தி சிக்கியுள்ளார். பெங்களூரு நிலையம் அருகே உள்ள கெங்கேரி பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து லிங்கசாமி தலைமையிலான போலீஸ் குழுவினர் அங்கு சென்று ஜெயந்தியைக் கைது செய்தனர்.