புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பியோட்டம்.. பிடிக்க  2 தனிப்படை!

Meenakshi
Dec 14, 2023,04:30 PM IST

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களுரை சேர்ந்த பெண் கைதி சிறையில் இருந்து நேற்று தப்பியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 வார்டன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி .2021ம் ஆண்டு நவம்பர் மாதம்  வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று வழக்கமான பணிக்கு பின்னர் கைதிகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது தான் ஜெயந்தி தப்பி சென்ற செய்தி தெரிய வந்துள்ளது.


இதற்கு பின்னர் ஜெயந்தி எவ்வாறு தப்பிச் சென்றார் என்று காவல் துறையினார் சிறையில் சோதனை செய்தனர்.  அப்போது , மாலை 5 மணியளவில் பார்வையாளர்கள் அறை அருகே இருந்து தப்பிச் சென்றது தெரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.




சிறையிலிருந்து துணிகரமாக தப்பிய பெண் கைதி ஜெயந்தியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் சென்றுள்ளது. சிறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு  செய்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னொரு படை திட்டமிட்டு வருகிறது.