கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!
சென்னை: காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை அதிரடியாக குறைந்துள்ளது. குறிப்பாக முருங்கைக்காய் 10 மடங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு தினந்தோறும் சராசரியாக 650 முதல் 700 வாகனங்களில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தது காய்கறிகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுமார் 800 வாகனங்களில் இருந்து 9000 டன் வரை காய்கறிகள் தினசரி ஆந்திரா, கேரளா கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகளின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால் வழக்கத்தை விட காய்கறி சந்தையில் வரத்து அதிகரித்ததால் காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம், காலிஃப்ளவர், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் ரூபாய் 15க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ தக்காளி ரூபாய் 8 க்கும் , ஒரு கிலோ பூண்டு ரூபாய் 90 க்கும், பீட்ரூட் 10 முதல் 12 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், கப்பல்பட்டி, இடையபட்டி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், மூலனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருங்கைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சீசன் என்பதால் முருங்கைக்காய் அதிகளவு காய்ந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் இருந்து டன் கணக்கில் முருங்கைக்காய் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் தேக்கம் அதிகரித்ததால் முருங்கை விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது 10 மடங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ முருங்கக்காய் தற்போது வெறும் ரூபாய் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கூலிக்கு கூட விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் முருங்கைக்காயின் விளைச்சல் குறைவு என்பதால், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து சந்தைக்கு வந்த முருங்கைக்காய் விலை ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.