"கிளிய காணோம்ப்பா.. பச்சக்கிளி".. கண்டுபிடிச்சு கொடுத்தா ரூ.10,000 பரிசு!

Aadmika
Aug 03, 2023,02:32 PM IST
தமோஹ் : "செல்ல கிளியை காணோம்.. கண்டுபிடிச்சு கொடுத்தா ரூ.10,000 பரிசு" என்ற போஸ்டர் தான் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

செல்லமாக வளர்த்த நாயை காணவில்லை. கண்டுபிடித்து தாருங்கள் என பேப்பரில் விளம்பரம் கொடுப்பவர்களை, போஸ்டர் ஒட்டுபவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்களையே மிஞ்சும் அளவிற்கு செல்லமாக வளர்த்த கிளியை காணவில்லை என ஒருவர் வித்தியாசமாக போஸ்டர் ஒட்டி உள்ளார்.

மத்திய பிரதேசத்தின் தமோஹ் பகுதியில் இந்திரா காலனியை சேர்ந்த சோனி குடும்பத்தினர் தான் இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளனர். இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். இந்த கிளி இவர்களின் குடும்பத்தில் ஒருவரை போல் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் மாலையில் அந்த கிளியை வெளியில் வாக்கிங் கூட்டி செல்வது, முதலாளியின் தோளில் அமர்ந்த படி அந்த கிளி சவாரி செய்வது அனைவரையும் வியக்க வைக்கும்.



இதே போல் கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த கிளியை வெளியில் அழைத்து சென்ற போது தெரு நாய்கள் சில அதை பார்த்து குரைத்துள்ளன. இதனால் பயந்து போன அந்த கிளி பறந்து சென்றுள்ளது. சோனி குடும்பத்தை சேர்ந்தவர்களும், நண்பர்களும் இரவு முழுவதும் தேடியும் அந்த கிளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிளியை காணவில்லை என்றும், அதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என்றும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.

அதோடு ஆட்டோ வைத்தும் இந்த தகவலை அறிவிக்க சொல்லி உள்ளனர். இதை கேட்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிறைய பேர் அந்த கிளியை தேடுவதற்கு உதவி செய்து வருகின்றனர். நெருங்கிய உறவினர்களை இழந்ததை போல் குடும்பமே கவலையில் ஆழ்ந்துள்ளதாக சோனி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த குடும்பத்திற்காக சிலரும், அவர்கள் அறிவித்துள்ள பரிசுக்காகவும் இந்த கிளியை தேடி வருகின்றனர்.