மொரட்டு தூக்கம் போடுபவரா நீங்கள்?.. உங்களுக்கு இந்த நோய்கள் வரலாம்

Aadmika
Aug 04, 2023,04:11 PM IST
டெல்லி : இரவில் தூங்கவில்லை என்றாலோ அல்லது போதிய அளவு தூக்கம் இல்லை என்றாலோ உடலில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். மனஅழுத்தம் போன்ற பலவிதமான மனரீதியிலான பிரச்சனைகளுக்கு ஆளாக நேரலாம் என்பது அனைவரும் தெரியும். ஆனால் அதிகபடியான நேரம் தூங்குவதாலும் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

வார நாட்களில் குறைவான நேரமும், வார இறுதி நாட்கள் அல்லது ஓய்வு நாட்களில் மொரட்டுதனமாக மொத்தமாக ஒரு வாரத்திற்கும் சேர்த்து வைத்து தூங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் இரவில் தூங்க வேண்டும். இதை விட குறைவாக தூங்குவதால் மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை வியாதி போன்ற பலவிதமான நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.



வார நாட்களில் குறைவாகவும், வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குவது, சாப்பாட்டின் அளவு, உணவின் தரம், அவர்கள் வேலை செய்யும் நேரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பியன் ஜோர்னல் ஆஃப் நியூட்ரீசன் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. வார நாட்கள், வார இறுதி நாட்கள் என மாறுபட்ட வாழ்க்கை முறை கொண்டவர்களுக்கு இதய நோய்கள், டைப் 2 டயபெடிக்ஸ் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 

வாழ்க்கை முறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. தூங்காமல் இருப்பதால் மட்டுமல்ல அதிகம் தூங்குவதாலும் உடலில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கின்றன. இதனால் முறையான தூக்கம்,  உடற்பயிற்சி ஆகியன உடலுக்கு மிகவும் அவசியமாகும். இரவில் சீக்கிரம் உணவு சாப்பிடுவது, தூங்குவதற்கு 2 அல்லது 3 மணி நேரம் முன்பாக உணவு சாப்பிடுவது, உணவு செரிமானம் ஆவதற்கு போதிய இடம் அளிப்பது ஆகியன உடல் ஆரோக்கியத்தை காக்க அவசியமாகும்.  

சராசரியாக தூங்க வேண்டிய நேரத்தை விட கூடுதலாக 90 நிமிடங்கள் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்ற முறையற்ற தூக்கமும் சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.