கவரப்பேட்டை: சரக்கு ரயில் மீது பாக்மதி ரயில் மோதி விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து சிலர் காயம்

Su.tha Arivalagan
Oct 11, 2024,11:01 PM IST

கவரப்பேட்டை, திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக வந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. சில பெட்டிகள் தடம் புரண்டன. இருப்பினும் இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.


இந்த கோர விபத்தில் சிக்கி  எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது  மைசூரிலிருந்து  தர்பங்கா செல்லக் கூடிய பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் அந்த மார்க்கத்தில் வந்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பாதையில் சரக்கு ரயில் நின்றிருந்தது தெரியாமல் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக மோதி விட்டது. 




மோதிய வேகத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. அந்தப் பகுதிக்கு ஆம்புலன்ஸ்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும் விரைந்தன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீவிபத்தில் சிக்கியுள்ள பெட்டிகளில் சிக்கியுள்ள பயணிகளைக் காக்கும் பணியில் உள்ளூர் மக்கள் உடனடியாக ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


சம்பந்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலானது காலை 10.30 மணியளவில் மைசூலிருந்து புறப்பட்டது. பெரம்பூர் வழியாக இந்த ரயிலானது தர்பங்கா செல்லக் கூடியதாகும். கவரப்பேட்டையைத் தாண்டும்போது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் சரியாக தெரியவில்லை. யார் மீது தவறு என்றும் தெரியவில்லை.


மருத்துவக் குழுவினரும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 2 பயணிகள் பெட்டிகள் எரிந்ததால் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டிருக்கின்றன. அந்தப் பகுதியில் அனைத்து மீட்புப் பணிகளையும் முடுக்கி விட்டு ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனைகளை ஆயத்த நிலையில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.


அவசர எண்கள் அறிவிப்பு




ரயில் விபத்து குறித்தும், அதில் பயணம் செய்த பயணிகள் நிலை குறித்தும் தகவல் அறிய அவசர எண்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 044-25354151, 044-24354995 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


ரயில் விபத்தைத் தொடர்ந்து சென்னை - கும்மிடிப்பூண்டி, விஜயவாடா மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் பல்வேறு முக்கிய ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளன.


தயார் நிலையில் சென்னை மருத்துவமனைகள்


காயமடைந்தவர்கள் தற்போது படிப்படியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். 5 பேர் எலும்பு முறிவுடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 


இதற்கிடையே, சென்னையில் உள்ள ஓமந்தூராரர் அரசு மருத்துவமனை, அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை தர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை நேரில் பார்த்து முடுக்கி விடுவதற்காக அமைச்சர் சா.மு. நாசரும் கவரப்பேட்டை விரைந்துள்ளார்.


பெரம்பூர் வழியாக தர்பங்கா செல்லும் ரயில்


விபத்தில் சிக்கிய ரயில் மைசூரிலிருந்து தமிழ்நாடு, ஆந்திரா வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா செல்லக் கூடியதாகும். இது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில். பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டுக்குள் நுழையும் இந்த ரயில் ஜோலார்ப்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக ஆந்திராவுக்குள் நுழையும். ஏழரை மணியளவில் இந்த ரயில் பெரம்பூர் வரும். அப்படித்தான் இன்றும் வந்து புறப்பட்டுள்ளது. எட்டரை மணியளவில் அது கவரப்பேட்டையைக் கடந்தபோதுதான் விபத்து நேரிட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்