Exit Polls: ஆந்திராவை அள்ளப் போகும் தெலுங்கு தேசம்.. தெலங்கானாவில் கடும் போட்டா போட்டி

Meenakshi
Jun 01, 2024,08:27 PM IST

ஹைதராபாத்:  ஆந்திராவில் தெலுங்குதேசம் - பவன் கல்யாண் - பாஜக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் தெலங்கானாவில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளிடையே கடும் போட்டா போட்டி நிலவுவதாகவும் பல்வேறு எக்சிட் போல் கணிப்புகள் கூறுகின்றன.


ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலுடன் இணைத்து லோக்சபா தேர்தலும் நடந்தது. அங்கு தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்தக் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் - பவன் கல்யாண்- பாஜக இணைந்து அமைத்துப் போட்டியிட்டன. காங்கிரஸ் தனி அணியாக போட்டியிட்டது.


ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் பெருவாரியான தொகுதிகளை தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றும் என்று பல்வேறு கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்தியா டிவி கணிப்பின்படி தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 15 முதல் 15 சீட் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 4 முதல் 6 சீட் வரையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 5 சீட் வரை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு 2 சீட் வரை கிடைக்குமாம்.


டுடேஸ் சாணக்கியா கணிப்பின்படி பார்த்தால், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 22 சீட் வரை கிடைக்குமாம். ஜெகன் மோகன் கட்சிக்கு 3 சீட் வரை கிடைக்கலாமாம். மற்றவர்களுக்கு வாய்ப்பில்லை. 




தெலுங்கானா


தெலங்கானாவைப் பொறுத்தவரை போட்டா போட்டி நிலவுகிறது. ஏபிபி சிவோட்டர் கணிப்பில், பாஜக (7-9) காங்கிரஸ் (7-9)  மற்றவை (1) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சத்தியம் டிவி  கணிப்பில்,  பாஜக (1-5) காங்கிரஸ் (7-10)  பாரதிய ராஷ்டிரியி சமிதி (2-6) ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 1 முதல் 2 சீட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


டுடேஸ் சாணக்கியாவின் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 12 சீட் வரையும், காங்கிரஸ் கூட்டணிக்கு 5 சீட்டுகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஆர்எஸ் கூட்டணிக்கு ஒரு சீட்டும் கிடைக்காதாம்.