அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி ஓபிஎஸ்.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்

Meenakshi
Jul 11, 2024,06:54 PM IST

சென்னை:   ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுகவின் ரத்தத்தை குடித்த அட்டைப் பூச்சிகள் இவர்கள். துரோகம் செய்த அவர்களை அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர் அழகு முத்துக்கோன். இவரது 314வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள அழகு முத்துக்கோனின் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள். முன்னாள் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்  மற்றும் கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். 




அதன்பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ஓபிஎஸ், சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைப்பதை தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களை கட்சியில் இணைக்குமாறு இபிஎஸ்ஸிடம்  6 முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தியதாக திட்டமிட்டு போலி மாயையை உருவாக்குகின்றனர். இது எள்ளளவும் உண்மை இல்லை. 


கட்சி தொண்டர்கள் ஏற்க முடியாத அளவிற்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். சசிகலா கட்சியிலேயே இல்லை. அவர் எப்படி அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சி செய்ய முடியும். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி ஆகிய 3 பேரும் இணைந்ததை தான் 90 சதவிகித அதிமுக தொண்டர்கள் இணைந்துவிட்டதாக சசிகலா சொல்கிறார்.


பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது கூட கட்சி விவகாரங்களில் பாஜகவை நாங்கள் தலையிட அனுமதிக்கவில்லை. அப்படி இருக்கும் போது மத்திய அரசு எப்படி எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். எங்கள் கட்சி தனித்தன்மையோடு இயங்குகிறது.ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவே அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.