ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!

Meenakshi
Feb 04, 2025,07:10 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குரிமை உள்ள அனைவரும் அவசியம் வாக்களிக்க வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். 


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 5ம் தேதி நாளை அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிப்ரவரி 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி வேட்பாளரும் அன்றே அறிவிக்கப்பட உள்ளார்.இந்த இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உட்பட 13 பேர் அரசியல் கட்சி வேட்பாளர்களும், 33 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 




இந்நிலையில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்த நிலையில், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர்.நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம்  2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் வாக்களிக்க உள்ளனர். 


மொத்தம் 237 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெறும் வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் பேசுகையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குரிமை உள்ள அனைவரும் அவசியம் வாக்களிக்க வரவேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்