முதல்வர் வராமலேயே ஈரோட்டில் ஜெயிச்சோம்ல.. அறிவாலயத்தில் கொண்டாட்டத்தில் குதித்த திமுகவினர்!
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருகிறது. அத்தொகுதியில் முதல்வர் மு க ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு போகாமலேயே திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறவுள்ளதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
2011 முதல் தேர்தலை சந்தித்து வரும் ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியில் இதுவரை தேமுதிக, அதிமுக தலா ஒரு முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு 2வது முறையாக இடைத் தேர்தலை சந்தித்துள்ளது ஈரோடு கிழக்குத் தொகுதி.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு அவர் மறைந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து அத்தொகுதி காலியானது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்த நிலையில் திமுக சார்பில் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகிய முன்னணி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். பிரதான கட்சிகளான அதிமுக, தேமுதிக, பாஜக, போன்றவை இத்தேர்தலை புறக்கணித்துள்ளன.
பிரதான கட்சிகளான திமுக, நாம் தமிழர் கட்சி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேசமயம், திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவில்லை. அமைச்சர்கள் மட்டுமே பிரச்சாரம் செய்து வந்தனர். ஏன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூட பிரச்சாரம் செய்யவில்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே தொடர்ந்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்குக் காரணம் என்னவென்றால் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, ஆகிய முக்கிய கட்சிகள் போட்டியிடாத காரணத்தால் திமுக சார்பில் முதல்வரும் துணை முதல்வரும் அத்தொகுதிக்கு நேரடியாக செல்லவில்லை. மாறாக கடைசி நாளில் விரிவான அறிக்கையை மட்டுமே வெளியிட்டிருந்தார் முதல்வர்.
இதற்கு முன்பு நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போதும் கூட முதல்வர் பிரச்சாரம் செய்யவில்லை. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருந்தார். முதல்வர் வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரித்திருந்தார். ஈரோடு கிழக்கில் முதல்வர் பிரச்சாரம் செய்யாத நிலையிலும், துணை முதல்வர் போகாத நிலையிலும் கூட அங்கு பெரிய வெற்றியை ஈட்டும் நிலையில் தற்போது திமுக உள்ளது.
இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கூடியுள்ளனர். முதல்வர் வராமலேயே திமுக வெற்றி பெற இருப்பதை அக்கட்சியினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஈரோடு கிழக்கிலும் கூட திமுகவினர் இப்போதே கொண்டாட்டங்களில் இறங்கி விட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்