ஈரோடு கிழக்கு .. 1,14,439 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அபார வெற்றி!

Su.tha Arivalagan
Feb 08, 2025,05:18 PM IST

சென்னை:  ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை 90 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.


நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தனது டெபாசிட் தொகையைப் பறி கொடுத்தார். அவர் மட்டுமல்லாமல் மற்ற 44 வேட்பாளர்களின் டெபாசிட் தொகையும் பறி போனது.


ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை - இறுதி நிலவரம்


வி.சி.சந்திரகுமார் (திமுக)சீதாலட்சுமி (நாம் தமிழர் கட்சி)
1,14,43923,810


முன்னதாக வி.சி.சந்திரகுமாருக்கு 197 தபால் வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு  13 வாக்குகளும் கிடைத்தன. நோட்டாவுக்கு 8 தபால் வாக்குகள் கிடைத்தன.


ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிட்டனர். மற்றவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர்.


இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஈரோடு சித்தோடு அரசு என்ஜீனியரிங் கல்லூரியில்தான் எண்ணப்படுகின்றன. பலத்த பாதுகாப்புடன் இன்று காலை வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குகள் எண்ணப்படும் அறையில் போடப்பட்டுள்ள மேசைகளுக்குக் கொண்டு வரப்பட்டன. தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா, தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்கள், அவர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டன. 




இதையடுத்து காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 17 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதற்காக 14 மேசைகள் போடப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்தார். தபால் வாக்குகளைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.


ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியின் வரலாறு


ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி, தொகுதி மறுவரையின் கீழ் 2008ம் ஆண்டு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் முதல் தேர்தல் 2011ல் நடந்தது. ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியின் முதல் சட்டசபை உறுப்பினராக இரு்நதவர் வி.சி.சந்திரகுமார். அப்போது அவர் தேமுதிக சார்பில் எம்எல்ஏ ஆகியிருந்தார். இதையடுத்து 2016ல் அதிமுகவின் கே.எஸ். தென்னரசு உறுப்பினரானார். 


2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா எம்எல்ஏ ஆனார். அவர் மறைவைத் தொடர்ந்து 2023ல் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அவர் மறைவால் தற்போதைய இடைத் தேர்தல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்