ஈரோடு கிழக்கு: ஓ.பி.எஸ்ஸைத் தொடர்ந்து.. ஏ.சி.சண்முகமும் பாஜக போட்டியிட ஆதரவு

Su.tha Arivalagan
Jan 22, 2023,10:22 AM IST
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் அக்கட்சிக்கு ஆதரவு தருவதாக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கூட்டணியில் அவர்களது இடைத்தேர்தல் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அதை விட முக்கியமாக திமுக கூட்டணியினர் தேர்தல் பிரசாரத்திலும் இறங்கி விட்டனர். அமைச்சர்கள் முத்துச்சாமி, கே. என். நேருதலைமையில் வீடு வீடாகப் போய் பிரசாரத்தையும் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

மறுபக்கம் அதிமுக கூட்டணியில் இன்னும் தெளிவு பிறக்காமல் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறார். ஆனால் அப்படி அவர் நிறுத்தினால் ஓ.பி.எஸ் தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது. அதேசமயம், இத்தொகுதியில் தான் போட்டியிட பாஜக விரும்புகிறது. குழப்பம் இப்படி இருக்கையில்,இத்தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோற்ற தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக இத்தொகுதியில் போட்டியிட விரும்புவதால் அதை விட்டுக் கொடுத்து விட்டதாக அறிவித்து விட்டது.

இந்த சூழ்நிலையில் தற்போது பந்து பாஜக வசம் வந்துள்ளது. பாஜகவின் விருப்பத்தை மீறி அதிமுகவின் இரு அணிகளும் செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி மீறுவாரா என்றும் தெரியவில்லை. ஒரு வேளை அவர் மீறிச் செயல்பட முடிவு செய்தால் ஓ.பி.எஸ் மூலம் இரட்டை இலை சின்னத்துக்கு பாஜக தரப்பு செக் வைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இப்படிக் குழப்பங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில், பாஜக போட்டியிட்டால்அதை ஆதரிப்போம் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். அதேபோல தற்போது புதிய  நீதிக் கட்சியும் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம் என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பொது வேட்பாளராக தேசியக் கட்சியான பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்தினால், அதனை புதிய நீதிக் கட்சி வரவேற்கும் என்று தெரிவித்துள்ளார்.