ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!

Meenakshi
Jan 18, 2025,08:06 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இதில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.


ஈரோடு கிழக்கு தொகுதி எம் எல் ஏவாக இருந்த  ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி அங்கு தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் அங்கு வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக, தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. பாஜகவும் தேர்தலை புறக்கணித்துள்ளது.  விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




இதனால் அங்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி  வேட்பாளராக சீதாலட்சுமி மட்டுமே முக்கியக் கட்சிகளாக களம் காண்கின்றனர். மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மொத்தம் 65 வேட்பாளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.  இன்று  மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.  இதில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. நாளைக்குள் மனுக்களை வாபஸ் பெற  கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து நாளை மாலை, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 


பிப்ரவரி மாதம் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்