ஈரோடு கிழக்கு நாம் தமிழர் வேட்பாளர்.. "சொல்டா சொல்டா"..  கலகலப்பூட்டிய சீமான்!

Su.tha Arivalagan
Jan 30, 2023,09:52 AM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு போல, வேறு எந்த கட்சியின் வேட்பாளர் அறிவிப்பும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்குமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு அத்தனை பேரின் கவனமும் நேற்று அக்கட்சி மீது விழுந்திருந்தது.



தமிழ்நாடு அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சியை தவிர்த்து எதையும் பார்க்க முடியாது, பண்ணவும் முடியாது. எல்லா பெரிய கட்சிகளின் சிந்தனையிலும், திட்டத்திலும் நிச்சயம் நாம் தமிழர் கட்சியும் இருக்கும். அந்த அளவுக்கு அதன் செயல்பாடுகள், அதன் பாதிப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது. ஒருவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ,, அக்கட்சி குறித்து சிந்திக்காமல் பேசாமல் இருக்க முடிவதில்லை. அதுவே அக்கட்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

தேமுதிக முன்பு இப்படித்தான் உறுதியுடன் கூடிய கொள்கை திடத்துடன் நடை போட்டு வந்தது. ஆனால் என்று அது தடம் மாறியதோ, அன்றே மக்களின் மனதிலிருந்து இடம்மாறி விட்டது. ஆனால் நாம் தமிழர் கட்சி அப்படி இல்லை. ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பார்வை மாறாமல், பாதை மாறாமல் தொடர்ந்து அதே வீரியத்துடன், வேகத்துடன் நடை போட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கில் பெரிய பெரிய கட்சிகளே போட்டியிடுவதில் ஏகப்பட்ட தடுமாற்றத்துடன் இருக்க, நாங்கள் போட்டியிடுவோம், வேட்பாளரை நிறுத்துவோம், அதுவும் பெண் வேட்பாளரை நிறுத்துவோம் என்று உடனடியாக அறிவித்தவர் சீமான். சொன்னபடி நேற்று தனது கட்சியின் வேட்பாளராக மேனகா நவநீதனையும் அறிவித்து விட்டார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் யார் என்பதை அறிய பெரும் ஆர்வம் தமிழ்நாடு முழுவதும் பரவிக் கிடந்ததைக் காண முடிந்தது. வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் அது வைரலாக பரவியது. நேற்றைய வேட்பாளர் அறிமுகத்தின்போது செய்தியாளர்களை சந்தித்து அதுகுறித்து அறிவித்து சீமான் பேசும்போது, எங்களது கட்சி சார்பாக தங்கை மேனகா போட்டியிடுகிறார். எங்களது பலவீனம் பணம் இல்லாதது.. அது எல்லோருக்கும் தெரியும். பலம், கடுமையாக உழைப்பது. அதை முழுமையாக செய்வோம் என்று கூறினார் சீமான்.

பின்னர் மேனகா பக்கம் திரும்பி "சொல்டா சொல்டா" என்று அவரையும் பேசச் சொன்னார். மேனாகவும் அனைவருக்கும் வணக்கம் என்று கூறி தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டார். அப்போது செய்தியாளர் ஒருவர், என்ன பிரச்சினையை முன்வைத்து பிரசாரம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது, சிரித்தபடி குறுக்கிட்ட சீமான், ஒரு பிரச்சினை, 2 பிரச்சினையா இருக்கு.. எல்லாப் பிரச்சினையும் எங்க பிரச்சினைதான் என்று தனது ஸ்டைலில் பதிலளித்தார். கூட்டம் கலகலப்பானது.

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் பிரசாரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்குமா என்று தெரியாது, ஆனால் நிச்சயம் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கும் வகையில் நாம் தமிழர் கட்சி பிரசாரம் இருக்கலாம் என்று இப்போதே தெரிகிறது. பார்க்கலாம்.