ஈரோடு கிழக்கு.. அனல் பறக்கும் பிரசாரம்.. நாளையுடன் ஓய்கிறது!

Su.tha Arivalagan
Feb 24, 2023,10:46 AM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நாளையுடன் அனல் பறக்கும் பிரசாரம் முடிவடையவுள்ளது.


ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு,  நாம்தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 


இவர்களை ஆதரித்து அவரவர் கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கப் பிரசாரம் செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில், இளங்கோவனுக்காக மிகத் தீவிரமான பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். 




முக்கியத் தலைவர்கள் பிரசாரம் செய்து வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 25ம் தேதி பிரசாரம் செய்யவுள்ளார்.  ஏற்கனவே இளங்கோவனுக்காக உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, காங்கிரஸ் தலைவர்கள், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்துள்ளனர். அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு பிரசாரம் செய்கிறார்கள்.


அதிமுக தரப்பில் முன்னாள் முதல்வரும், இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலையும், அதிமுக வேட்பாளருக்காக பேசி விட்டுப் போயுள்ளார்.


நாம் தமிழர் கட்சிக்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கியப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். தேமுதிக சார்பிலும் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனல் பறக்க நடந்து வரும் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் 26ம்  தேதி ஓய்வு நாளாகும். 27ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.


பிரசாரம் ஓயும் 25ம் தேதி மாலை 5 மணியுடன் வெளியூர்க்காரர்கள் தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும். அதன் பிறகு தொகுதியில் அவர்கள் தங்கியிருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.