தமிழர் உரிமை மீட்போம்! தமிழ்நாடு காப்போம்! ...தேர்தல் முழக்கத்தை வெளியிட்ட இபிஎஸ்

Meenakshi
Feb 24, 2024,05:49 PM IST

சென்னை: தமிழர் உரிமை மீட்போம்! தமிழ்நாடு காப்போம்! எங்கள் தேர்தல் முழக்கம் என்ற லோக்சபா தேர்தல் ஸ்லோகன் மற்றும் லோகோவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று வெளியிட்டார்


மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் கட்சியை சேர்ந்தவர்களும், தொண்டர்களும் இருந்தனர். ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இணைய பக்கத்தில் கட்சியின் புதிய உறுதிமொழியை பதிவிட்டிருந்தார்.




அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவல் தெய்வம், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் வழிவந்த அரசியல் ஞானி, தமிழக மக்களின் பாசத்திற்குரிய அன்பு அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் இன்று ,  ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி, எந்த விதத்திலும் சமரசம் இல்லாமல், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், சமநிலையோடு, சமதர்மத்தோடு, சமூக நீதியோடு அரசாண்ட சிங்க நிகர்த் தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். தன்னுடைய வாழ்வு இந்த மக்களுக்கான தவ வாழ்வு. எப்போதும் மக்களிடத்திலே அதை நிரூபிக்கின்ற விதமாக "உங்களால் நான், உங்களுக்காகவே நான்" என்று தொடர்ந்து மக்கள் முன் சூளுரை ஏற்று, அதன்படி மக்கள் பணியாற்றிய ஒப்பற்ற தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்,


அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்போம்,என தருமைக் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்றி, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றியை எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெற்று, அந்த வெற்றியை புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கு வெற்றி மாலைகளாக, அவர்கள் நீடு துயில் கொள்ளும் நினைவிடங்களில் சமர்ப்பிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.நம்மையெல்லாம் அன்புடன் அரவணைத்து, 


அரசியல் பாடம் சொல்லி, வழி நடத்திய நம் அன்பு அம்மா அவர்களின் பிறந்த நாளில், கழகம் காக்கவும், கழகத்தை தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறச் செய்திடவும், நாம் அனைவரும் அயராது உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்! என்று உளமார உறுதி ஏற்போம். அதேபோல், 2026-ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆண்டு என்பதையும் உறுதிப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.


மேலும்,  எடப்பாடி கே பழனிச்சாமி செய்தியாளர்களை சந்திக்கையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் கழகம் காக்கவும்,  தேர்தலில்  மகத்தான வெற்றி பெறச் செய்திடவும், நாம் அனைவரும் இன்று முதல் பகல் இரவு பாராமல் அயராது உழைப்போம். 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதை உறுதிப்படுத்துவோம் என்று தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அதிமுக கூட்டணியை அறிவிப்போம். விரைவில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். தேர்தல் பரப்புரையை இன்று முதல் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார். தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழர் உரிமையை மீட்போம்! தமிழ்நாடு காப்போம்! என்ற வாசகத்துடன் இலட்சினையையும்,  ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஜெயலலிதா பேசுவது போன்ற காணொலியையும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.