இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட்.. விராட் கோலி விளையாட மாட்டார்.. டீம் அறிவிப்பு!

Su.tha Arivalagan
Feb 10, 2024,05:16 PM IST

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடாத நிலையில், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் கூட அவர் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.


தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் விளையாட முடியவில்லை என்று விராட் கோலி கூறியிருந்தார். அதே முடிவு காரணமாக தற்போது மீதம் உள்ள 3 போட்டிகளிலும் கூட அவர் விளையாடவில்லை. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட ஆரம்பித்த பிறகு தற்போதுதான் முதல் முறையாக ஹோம் சீரிஸ் ஒன்றை விளையாடாமல் தவிர்த்துள்ளார் என்பதால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். 




இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்துள்ளன. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் இந்தியாவும் வென்றுள்ளன. மீதமுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


அணி விவரம்:


ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரீத் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல். ராகுல், ரஜத் படிதார், சர்பிராஸ் கான், துருவ் ஜுரல், கே.எஸ். பாரத், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.




இதில் ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல் ஆகியோர் காயம் காரணமாக முதல் இரு போட்டிகளில் விளையாடவில்லை. அவர்கள் பிட்னஸ் உறுதிப்படுத்தப்பட்டால்  3 போட்டிகளிலும் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.


இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் பிப்ரவரி 23ம் தேதியும், 5வது மற்றும் கடைசி போட்டி தரம்சலாவில் மார்ச் 7ம் தேதியும் நடைபெறும்.