"அந்தப் பாவியை.. ஸாரி.. ஆவியை டைவர்ஸ் பண்ணிட்டேன்"..  என்னம்மா சொல்றீங்க!!

Su.tha Arivalagan
Jul 19, 2023,09:15 PM IST
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகியும், பாடலாசிரியையுமான புரோகார்டே என்பவர் கடந்த ஒரு வருடமாக தான் குடும்பம் நடத்தி வந்த ஆவியிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டதாக கூறி அனைவரையும் பதற வைத்துள்ளார்.

ஆக்ஸ்போர்ட்ஷயரைச் சேர்ந்தவர்தான் இந்த புரோகார்டே. இவர் கடந்த ஒரு வருடமாக ஒரு ஆவியுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறி அனைவரையும் அஞ்சு ஸ்டெப் பேக்கடிக்க வைத்துள்ளார். ஆனால் தற்போது அந்த ஆவியை விவாகரத்து பண்ணி விட்டாராம்.. ஏனாம்?.. வர வர அந்த "ஆவி புருஷன்" புரோகார்டேவிடம் பொசசிவாக இருக்கிறாராம்.. அதெல்லாம் சரிப்படாது தம்பி.. போய்ட்டு வா என்று கூறி விவாகரத்து செய்து விட்டாராம் புரோகார்டே.



(படிக்கிற உங்களுக்கே பதக் பதக்னு இருக்குல்ல.. எழுதுன எங்களுக்கும் அதே பதக் பதக்தான்.. தொடர்ந்து பயப்படாம படிப்போம் வாங்க பாஸ்!)

இந்த ஆவி விக்டோரியாவைச் சேர்ந்த இறந்து போன வீரராம். ஆவியின் பெயர் எட்வர்டோ. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இரவு நேரத்தில் படுக்கை அறைக்குள் நுழைந்த எட்வர்டோ ஆவிக்கும், புரோகார்டேவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாம். பின்னர் இருவரும் உறவு கொண்டனராம். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனராம். 2022ம் ஆண்டு ஹாலோவின் நிகழ்வின்போது இருவரும் ஒரு சர்ச்சில் வைத்து  கல்யாணம் செய்து கொண்டனராம். (இந்த கல்யாணம் தொடர்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் புரோகார்டே. அதில் அவர் கருப்பு நிற உடையில் மணக்கோலத்தில் இருக்கிறார்.. அருகே ஒரு காலியிடம் இருக்கிறது.. அங்குதான் எட்வர்டோ ஆவி நின்றிருந்ததாம்)

சரி கல்யாணத்திற்குப் பிறகு என்ன நடந்துச்சுன்னு தெரியுமா.. இருவரும் வேல்ஸில் உள்ள பாரி தீவுகளுக்கு ஹனிமூன் போனார்களாம். அங்கு ஓவராக குடித்து விட்டு எட்வர்டோ ஆவி ஏகப்பட்ட அலப்பறையை செய்ததாம். இதனால் புரோகார்டேவுக்கு மானமே போய் விட்டதாம். கடுப்பாகி விட்டாராம். "ஏன்டா பாவி.. ஸாரி ஆவி.. இப்படியா பண்ணுவ" என்று அங்கு வைத்தே சண்டை போட்டு விட்டாராம்.

அந்த சண்டை பிறகு தொடர் கதையாகி விட்டதாம். எட்வர்டோ ஆவிக்கும், புரோகார்டேவிடம் ரொம்ப பொசசிவ் உணர்வு வந்து விட்டதாம். அடிக்கடி அவரை மிரட்டவும் செய்ததாம். இதனால் தனது சுதந்திரம், நிம்மதி பாதிக்கப்பட்டதாக கூறி தற்போது அந்த ஆவி புருஷனை விவாகரத்து செய்து விட்டாராம் புரோகார்டே.



இதுல இன்னொரு குழப்பம் வேற நடந்துச்சாம்.. அது என்னாது..??

இவங்க கல்யாணம் நடந்தபோது அந்த சர்ச் பக்கம் மர்லின் மன்றோவின் ஆவி எட்டிப் பார்த்துச்சாம். அதைப் பார்த்து மர்லின் மீது எட்வர்டோவுக்கு கிரஷ் ஆகி விட்டதாம். இதுவும் இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட முக்கியக் காரணமாம். 

அவ்வளவுதாங்க செய்தி.. இதுக்கு மேல எழுத நம்மாலேயே முடியலை.. புரோகார்டே அடுத்து என்ன பண்ணப் போறார்னு தெரியலை.. இங்கிலாந்து மக்களும் அதுக்காகத்தான் காத்திட்டிருக்காங்க.. வாங்க நாமளும் வெயிட் பண்ணுவோம்.