எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க.. ஸாரி சொன்ன இங்கிலாந்து பிரதமர்.. என்னாச்சு?

Baluchamy
Jan 20, 2023,04:39 PM IST

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கார் பயணத்தின்போது சீட் பெல்ட் அணியாமல் பயணித்த வீடியோ வெளியான நிலையில் தற்போது ரிஷி மன்னிப்பு கேட்டுள்ளார்.


இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றார். இங்கிலாந்து வரலாற்றையே திருப்பி போடும் நிகழ்வாக ரிஷி சுனக்கின் பிரதமர் பதவியேற்பு உலகையே திரும்பி பார்க்கவைத்தது.


இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் காரில் பயணிக்கும்போது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்வதற்காக தான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வெளியாகி அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


ரிஷி சுனக் வீடியோவில் பேசியதை கவனித்தார்களோ இல்லையோ.. அவர் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்ததை பலரும் நோட் செய்துவிட்டனர். இது சர்ச்சையானது. பிரதமரே, இப்படி காரில் சீட் பெல்ட் போடாமல் பயணிக்கலாமா என்ற கேள்வி எழுந்தது.


ரிஷி சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்த சம்பவம் பேசும் பொருளாக மாறிய நிலையில் தற்போது தான் செய்தது தவறு என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இங்கிலாந்தில், காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து பயணிப்பது கட்டாயம் என்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தால் 100 பவுண்டுகள் இந்திய மதிப்பில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் அது வழக்காக பதிந்து நீதிமன்றத்திற்கு சென்றால் 500 பவுண்டுகள் இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.