அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி மீது பாலியல் தாக்குதல்.. போலீஸ் தீவிர விசாரணை

Su.tha Arivalagan
Dec 25, 2024,04:50 PM IST

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் தாக்குதலுக்குள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.


அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வரும் இளநிலை மாணவி ஒருவர் தனது சீனியர் மாணவருடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு இடத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிலர் அந்த மாணவரைத் தாக்கி விட்டு  அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக அக்கிரமத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.


அதன் அந்த நபர்கள் தப்பி விட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததும் கோட்டூர்புரம் போலீஸார் விரைந்து வந்து மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்தும், சம்பந்தப்பட்ட நபர்களின் அடையாளம் குறித்தும் மாணவி, காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். அவர்கள் மாணவர்களா அல்லது ரவுடிகளா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.




பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்


இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது. 


மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 


உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்