கண்ணோடு தேங்கிப் போன கனவுகள்.. மீண்டும் பிறந்து வா பாபு!

Meenakshi
Sep 19, 2023,03:00 PM IST

சென்னை: ஒவ்வொரு கனவின் வலியும் கண்ணில் தெரியும் என்பார்கள்.. பாபுவும் அப்படித்தான்... பரிதாபமாக மரணித்துப் போயிருக்கிறார் என் உயிர்த் தோழன் பாபு.


இயக்குநர் பாரதிராஜாவின் என் உயிர் தோழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக  அறிமுகமானவர் நடிகர் பாபு. கடந்த 30 வருடமாக படுத்த படுக்கையாக இருந்து வந்த பாபு தற்போது மரணத்தைத் தழுவியுள்ளார்.




மிகப் பெரும் சினிமாக் கனவுடன் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாபு. என் உயிர்த் தோழன் படத்தில் அவர் மெட்ராஸ் பாஷை பேசி படு இயல்பான நடிப்பை அளித்து அசத்தியிருந்தார். அந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. அடுத்தடுத்து அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு என அவர் நடித்த படங்களில் அவர் பேசப்பட்டார்.


அடுத்து அவர் நடித்த மனசார வாழ்த்துங்களேன் படம் அவரது வாழ்க்கையை முடக்கிப் போட்டு விட்டது. இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது அவருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. நடமாட முடியாத நிலைக்குப் போய் விட்டார் பாபு. அன்று முதல் அவர் கடந்த 30 வருடமாக படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார்.


படுக்கையில் கிடந்தபடி தனது கனவுகள் எல்லாம் நொறுங்கிப் போனதை எண்ணி எண்ணி வேதனைப்பட்டு வந்த அவருக்கு, தான் மறுபடியும் நடமாடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அது கடைசி வரை பலிக்காமலேயே போய் இந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டுப் போய் விட்டார் பாபு.


பாபுவின் கண்கள் மிகவும் பவர்புல்லாக இருக்கும். அத்தனை உணர்வுகளையும் அதில் அழகாக காட்டுவார் பாபு. அந்தக் கண்களை இப்போது பார்த்தாலும் கூட அவரது தேங்கிப் போன கனவுகளை பார்க்க முடியும்.. மீண்டும் பிறந்து வாங்க பாபு.