பிரதமர் மோடியை பாலோ செய்யும் எலான் மஸ்க்.. அப்படின்னா அது நடக்கப் போகுதா?!

Su.tha Arivalagan
Apr 11, 2023,09:56 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் பக்கத்தை, டிவிட்டரின் தலைமை செயலதிகாரி எலான் மஸ்க்  பாலோ செய்ய ஆரம்பித்துள்ளார். இதனால் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

டிவிட்டர் தலைமை செயலதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்றது முதலே பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது அந்த சமூக வலைதளம். அதில் டிவீட் போடுவோர்தான் பரபரப்பாக இருப்பார்கள் என்று பார்த்தால் அதில் வேலை பார்த்தவர்களை எல்லாம் அனல் மேல் படுக்க வைத்து வேடிக்கை பார்த்து வருகிறார் எலான் மஸ்க். அந்த அளவுக்கு டார்ச்சரோ டார்ச்சர். எப்ப வேலை போகும் என்றே தெரியாமல் அத்தனை பேரும் வேலை பார்த்து வருகின்றனர்.



இந்த நிலையில் பாஜகவினருக்கு சந்தோஷமான ஒரு காரியத்தை செய்துள்ளார் எலான் மஸ்க். அட ஆமாங்க, பிரதமர் நரேந்திர மோடியை டிவிட்டரில் பாலோ செய்ய ஆரம்பித்துள்ளார் மஸ்க். மஸ்க்தான் உலகிலேயே அதிக அளவில் டிவிட்டரில் பாலோ செய்யப்படும் நபர். அதாவது 134.3 மில்லியன் பேர் அவரை பாலோ செய்கின்றனர். ஆனால் அவரோ 195 பேரைத்தான் பாலோ செய்கிறார். அந்த 195 பேரில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இணைந்துள்ளார்.

எலான்  மஸ்க்கின் டெஸ்லா கார் இந்தியாவுக்கு வருவதில் பெரிய சிக்கல் இருந்து வருகிறது. இந்தியாவின் விதிமுறைகள் தங்களுக்கு செட் ஆகாது என்று மஸ்க் கூறி விட்டதால் டெஸ்லா கார் இந்தியர்களின் கனவாகவே தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை மஸ்க் பாலோ செய்ய ஆரம்பித்திருப்பதால், டெஸ்லா கார் விரைவில் இந்தியாவுக்கு வந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் டிபேட் வெடித்துள்ளது. இந்தியாவைக் கண்டு கொள்ளாமல் இருந்தவர்தான் மஸ்க். அப்படி இருக்கையில் எப்படி அவர் திடீரென நரேந்திர மோடியை பாலோ செய்யும் முடிவுக்கு வந்தார்.. அவரை எது அப்படி ஹெவியாக லைக் பண்ண வைத்தது என்று வடிவேலு ரேஞ்சுக்கு பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

அதேசமயம், இது பிரதமர் மோடியின் ராஜதந்திரங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று மோடி ஆதரவாளர்கள் புகழ ஆரம்பித்துள்ளனர்.  எப்படியோ உலகத்துக்கு நல்லது நடந்தால் சரித்தான்!