சென்னையில் திடீர் சிக்னல் கோளாறு.. மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால்.. பயணிகள் அவதி!
சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் தண்டவாளங்களில் ஓடி சென்று ஏறும் சூழல் உருவானது. இதனால் பயணிகள் கடும் அவதியற்றனர்.
சென்னைக்கு இன்று காலை வந்த தூத்துக்குடி ராமேஸ்வரம் என அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. அதே சமயத்தில் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி செல்லும் நிலைமை ஏற்பட்டது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வர தாமதமானது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமல்லாமல் லோக்கல் ரயில்களும் தாமதமாக வந்ததால் ரயில்களை பிடிக்க பயணிகள் ஆபத்தான நிலையை கூட அறியாமல் தண்டவாளங்களில் ஓடி சென்று ரயிலை பிடிக்க முனைந்தனர்.
அதே போல் செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்ததால் நேரம் ஆக ஆக பயணிகள் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் அனைத்து பிளாட்பார்ம் களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இந்த சிக்னல் கோளாறு காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இது குறித்த முன்கூட்டியே எந்தவித முன்னறிவிப்பும் விடுக்காததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சமீப காலமாகவே ரயில்களில் சிக்னல் கோளாறு ஏற்படுவதால் ரயில்கள் தாமதமாக வருவதாகவும் இதனை சரி செய்ய ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எல்லா பிரச்சினைகளும் விரைவில் சரி செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
அதேபோல் சென்னையில் இன்று அதிகாலையில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக வந்தன. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் கடுமையாக நிலவியது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வந்தது. அதே சமயத்தில் பனிப்பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்