தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா.. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் திடீர் முடிவு!

Su.tha Arivalagan
Mar 09, 2024,09:02 PM IST

டெல்லி: மத்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார்.


மத்திய தேர்தல் ஆணையத்தில் ஆணையராக இருந்து வந்தவர் அருண் கோயல். அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று  அருண் கோயல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை உடனடியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.




3 தேர்தல் ஆணையர்களைக் கொண்ட ஆணையத்தில் ஏற்கனவே ஒரு ஆணையர் பதவி காலியாக இருந்தது. தற்போது அருண் கோயல் ராஜினாமாவைத் தொடர்ந்து காலியிடங்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே ஆணையர் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


யார் இந்த அருண் கோயல்?


அருண் கோயல் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 2022ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இவர் தனது அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின்போது, ஆஜராகி வாதாடிய பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறுகையில், மின்னல் வேகத்தில் இந்த நியமனத்தை நடத்தியுள்ளனர். அனைத்து விதிமுறைகளையும் மத்திய அரசு அப்பட்டமாக மீறியுள்ளது.  எனவே இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார் என்பது நினைவிருக்கலாம்.


1985ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல், தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பு மத்திய கனரக தொழில்துறை செயலாளராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.