தமாகாவுக்கு "சைக்கிள்".. தேர்தல் ஆணையம் கொடுத்த உறுதிமொழி.. வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்!

Su.tha Arivalagan
Feb 23, 2024,06:42 PM IST

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  இதையடுத்து வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்.்


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தோம். அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் தங்களது மனு மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலுக்கும்  தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.




இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, ஆணையத்திடம் தமிழ் மாநில காங்கிரஸ் அளித்த மனுவில் குறைகள் இருப்பதாகவும் அதனால் அந்த குறைகளை சரி செய்து மீண்டும் அளித்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும் என கூறினார். 


மேலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரசின் மனு பரிசீலிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில்  தெரிவிக்கப்பட்டது. 


இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ் மாநில காங்கிரசின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உத்தரவிட்டு  மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.