நாடு முழுவதும் இதுவரை ரூ. 4650 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் புதிய வரலாறு!

Su.tha Arivalagan
Apr 15, 2024,06:14 PM IST

டெல்லி: மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகள் நாடு முழுவதும் இதுவரை ரூ. 4650 கோடி மதிப்புள்ள பணம், போதைப் பொருட்கள், பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பணப் பறிமுதல் இந்தத் தேர்தலில்தான் நடந்துள்ளது. 


கடந்த 2019 தேர்தலின்போது மொத்தமே ரூ. 3475 கோடிதான் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இப்போதோ முதல் கட்ட வாக்குப் பதிவு நடப்பதற்கு முன்பே ரூ. 4650 கோடியை பறிமுதல் செய்துள்ளது தேர்தல் ஆணையம். 


போதைப் பொருட்கள்தான் அதிகம்



பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 45 சதவீதம் போதைப் பொருட்கள்தான். மார்ச் மாதத்திலிருந்து ரூ. 2068.85 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ. 1142.49 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  தங்கம், வெள்ளி உள்ளிட்டவை ரூ. 562.10 கோடி அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 489.31 கோடிக்கு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரொக்கப் பணம் மட்டும் ரூ. 395 கோடிக்கு பறிமுதல் ஆகியுள்ளது.


தேர்தலின்போது மிகப் பெரிய அளவில் போதைப் பொருட்கள், தங்கம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள், பல்வேறு வகையான கிப்ட்டுகள், ரொக்கப் பணப் புழக்கம்  அதிகமாக இருக்கும். வாக்காளர்களைக் கவர டிசைன் டிசைனாக கிப்ட் பொருட்களைத் தருவது அரசியல் கட்சிகளின் வழக்கமாகும். எனவே ஜனவரி மாதத்திலிருந்தே இந்தப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வந்தது தேர்தல் ஆணையம்.



மார்ச் மாதத்தில் மட்டும் இந்த தொகை வந்திருக்கிறது என்றார், ஜனவரி மாதத்திலிருந்து நடந்த சோதனையில்  மேலும் ரூ. 7502 கோடி மதிப்புள்ள பணம், மது, போதைப் பொருட்கள், பல்வேறு பொருட்கள், இலவசங்களும் சிக்கியுள்ளன. மொத்தமாக கணக்கிட்டால் ரூ. 12,000 கோடி அளவிலான பொருட்கள் இதுவரை சிக்கியுள்ளன.


தேர்தல் சமயத்தில்  கருப்புப் பண புழக்கம் அதிகம் இருக்கிறது என்பதால் இதை சமாளிப்பது எப்போதுமே சவாலுக்குரியதாக இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.