லோக்சபா தேர்தலை இழிவுபடுத்த பொய்யான பிரசாரம் செய்கிறார்கள்... தேர்தல் கமிஷன் குற்றச்சாட்டு

Aadmika
Aug 05, 2024,10:14 AM IST

டில்லி : நடந்து முடிந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இழிடுபடுத்தும் வகையில் சிலர் பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள் என இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 2024 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் மிக வெளிப்படையான முறையில் நடத்தப்பட்டவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


நேற்று தேர்தல் கமிஷன் தனது எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வரலாற்றின் மிகப் பெரிய தேர்தலாக லோக்சபா தேர்தலை இழிவுபடுது்தும் வகையில் சிலரால் பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தேர்தலில் ஒவ்வொரு கட்டமும் வேட்பாளர்களுக்கும் தெரியும் வகையில் மிக வெளிப்படையான முறையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது.  தேர்தல் நடைபெற்ற நாளன்று இரவு 7 மணி வரை வரிசையில் காத்திருந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால்,தேர்தல் நடந்த நாளன்றும், அதற்கு அடுத்த நாளும் இருக்கும் தகவல்களை ஒப்பிட்டு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.




வேட்பாளர் அல்லது தேர்தல் நடத்தும் அதிகாரி மூலம் தேர்தல் மனு புகாராக அளிக்கப்பட்டிருந்தால் அது விசாரிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் அது போல் எந்த தேர்தல் புகாரும் வரவில்லை என்றும் தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தி உள்ளது. 


தேர்தல் கமிஷனால் நடத்தி முடிக்கப்பட்ட லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து கடந்த மாதம் மகாராஷ்டிராவின் விஎஃப்டி வெளியிட்ட அறிக்கை, சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட பொது நல வழக்குகள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் தேர்தல் கமிஷன் இந்த பதிவினை வெளியிட்டுள்ளது.


தேர்தல் தேதிகளை பிரதமர் மோடிக்கு சாதகமாக முடிவு செய்தது தேர்தல் ஆணையம், லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவின்போது வாக்குப் பதிவு விவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படவில்லை என்பது அப்போது இந்தியா கூட்டணி கட்சிகள் வைத்த மிகப் பெரிய குற்றச்சாட்டாக இருந்தது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கும் எதிர்க்கட்சிகள் சென்றனர். அதன் பின்னர் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்குப் பதிவு விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டன.